CM Stalin: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ‘ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கிடுக’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்ய இடைக்கால நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி இரவு வரை 24 மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் உணவு, இருப்பிடம் இன்றி மக்கள் பலரும் அவதிப்பட்டனர். குறிப்பாக வீட்டை விட்டு கூட வெளியேற முடியாமல் முடங்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
இதனிடையே மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பத்திரியாளர்களை சந்தித்து மழைநீர் தேங்க காரணம், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல தகவல்களை தெரிவித்தார். இந்நிலையில் வெள்ள சேதங்களை சரி செய்ய நிவாரணத்தொகை கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 5) கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















