MK Stalin: “என் பொறுப்பை சிறப்பா செஞ்சிருக்கேன்.. மீண்டும் திமுக ஆட்சி தான்” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இன்னும் வலிமை பெற்றுள்ளேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். தொடர்ந்து மறுநாள் உயிரிழந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.
கடைசி நாளில் நன்றி சொன்ன முதலமைச்சர்
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகாலத்தில் 5 நிதிநிலை அறிக்கைகள், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை சமர்பித்துள்ளோம். இந்த நேரத்தில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் இருவரும் பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலுரை வழங்கியிருக்கிறார்கள். அதனை 2 மாதங்களில் மீண்டும் வந்து தொடர்வோம் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டைப் போல எனக்கும் இருக்கிறது. எனக்கு தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாக செய்துள்ளேன்.
மீண்டும் ஆட்சிக்கு வந்து நலத்திட்டங்களை தொடர்வோம். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பிரித்து பார்க்காமல் அனைவருக்காகவும் செயல்பட்டுள்ளோம். சுயமரியாதை எள்ளளவு தீண்டப்பட்டாலும் அதை எதிர்க்கும் வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேன். இந்த மிகப்பெரிய வாய்ப்பை தந்த தமிழ்நாடு மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய வாய்ப்பு தந்த "தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #CMMKStalin #TNAssembly #TNElection2026 #ABPNADU pic.twitter.com/ltIfMS2cJO
— ABP Nadu (@abpnadu) February 20, 2026
ஆளுநருக்கும், எனக்கும் தனிப்பட்ட வேறுபாடு கிடையாது. அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அவை கண்ணியத்தை கடைபிடித்து குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றில்லாமல் என்மீது அன்பு காட்டும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் பெற வைக்கும், முடியும் என்ற நம்பிக்கையை நான் பெற்றுள்ளேன். எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையை பெற்றிருக்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் கடைசி நாளை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதற்கிடையில் முதலமைச்சர் உரை நிகழ்வை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜிகே மணி போன்றோர் உரையாற்றினர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















