"உங்கள் எதிர்காலம் அரசின் கையில்": ஆதரவற்ற 4 குழந்தைகளுக்கு தாயுள்ளத்துடன் உதவிகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணை, மற்றும் கல்வி நிதி உதவிகள் ஆகியவை இதில் அடங்கும்.
துயரச் சம்பவம்: ஆதரவின்றித் தவித்த குடும்பம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் கடந்த நவம்பர் 14, 2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தி அவர்களும் ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டே உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். பெற்றோரை இழந்த இந்தத் தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் ஆதரவின்றித் தவித்த இந்தத் துயரச் சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொலைபேசி வாயிலாக ஆறுதல்
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக அந்த நான்கு குழந்தைகளையும் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது, குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதி அளித்தார். இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பதிவிலும், "இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்" என்று குறிப்பிட்டு, அரசின் கடமை உணர்வை வெளிப்படுத்தினார்.
எதிர்காலத்தை உறுதி செய்யும் உதவிகள்
முதலமைச்சர் அளித்த உறுதிமொழியைச் செயல்படுத்தும் விதமாக, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நான்கு குழந்தைகளுக்கும் வாழ்வாதார உதவிகளை அவர் வழங்கினார்.
அதன்படி, இன்றையதினம் மறைந்த கமலக்கண்ணன் அவர்களின் மகள் – செல்வி லாவண்யாவிற்கு ரூ.2,50,000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா,கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
ரூ.3,55,600/- மதிப்பீட்டில் வீடு கட்டுதவற்கு ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர்
பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும், மகள் செல்வி
ரிஷிகா மற்றும் மகன் செல்வன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ்
மாதம் ரூ.2000/- நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மகள் செல்வி ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக
ரூ.6,000/- உதவித்தொகை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
இந்த நிதி உதவித் திட்டங்கள் மற்றும் அரசுப் பணி நியமன ஆணை மூலம், நான்கு குழந்தைகளும் தங்களது வருங்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்ள தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. ஒரு குடும்பத்தில் மூத்த மகளுக்கு அரசு வேலை மற்றும் நிரந்தர வீடு வழங்கப்பட்டதன் மூலம், மற்ற இளைய குழந்தைகளுக்கும் உறுதியான ஆதரவு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் இந்த மனிதநேயமிக்க நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





















