![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Assembly: தஞ்சை வேளாண் கல்லூரி இனி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி என அழைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சை வேளாண் பல்கலைகழகத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் பல்கலைகழகம் என பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![TN Assembly: தஞ்சை வேளாண் கல்லூரி இனி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி என அழைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு Chief Minister Stalin has announced that an award will be given in the name of MS Viswanathan to outstanding students in Tamil Nadu Agricultural University. TN Assembly: தஞ்சை வேளாண் கல்லூரி இனி எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி என அழைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/11/499db6c2566528ac6221d41f24fb14691697011357000589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் விஸ்வநாதனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழாரம்:
அப்போது பேசிய அவர், “வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம் வேளாண் தொழிலைத் தேர்ந்தெடுத்தது என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதுடன் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமும் ஆகும். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன.
கடல் மட்டம், வெப்பநிலை மாற்றம்:
இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969-ஆம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளப்பரிய அன்பு கொண்டவரான எம்.எஸ். சுவாமிநாதன், தலைவர் கலைஞர் மறைவின்போது மிக உருக்கமான இரங்கற்குறிப்பையும் பதிவு செய்திருந்தார். தன்னுடைய பெயரிலான எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு முதலமைச்சர் கலைஞர் நிலம் தந்து உதவியதையும், ஜே.ஆர்.டி. டாடா பெயரிலான சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனுடனும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்ததையும் நன்றிப் பெருக்குடன் பதிவு செய்துள்ளார்.
தமிழக அரசு மரியாதை:
தமிழ்நாட்டிற்கான உயிரி தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கியவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என்பதைக் குறிப்பிட்டுள்ள எம்.எஸ். சுவாமிநாதன், கலைஞரின் ஆட்சி எப்போதும் உழவர்கள் நலன் நாடும் ஆட்சியாகவே இருந்தது என்பதையும், விஞ்ஞானிகளின் விஞ்ஞாளியாக முத்தமிழறிஞர் கலைஞர் திகழ்ந்தார் என்றும் பாராட்டியுள்ளார்.
பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அரசின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர். பத்மவிபூஷன். ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்:
2021-இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது. அவருடைய பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழ்நட்டின் வளர்ச்சிக்கு இன்றயை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சராகிய என்னையும் அவர் பாராட்டி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு அவர் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)