![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM MK Stalin: தகவல் தொழில் நுட்ப துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழ்நாடு.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.
![CM MK Stalin: தகவல் தொழில் நுட்ப துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழ்நாடு.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்! Chief Minister Mk Stalin inaugurated the 50th Bridge 2023 seminar at Nandambakkam Trade Centre, Chennai CM MK Stalin: தகவல் தொழில் நுட்ப துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி தமிழ்நாடு.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/14/cfe947cd4c6156fb2e4f1b4530aad0ed1678771971796571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 50வது பிரிட்ஜ் 2023 கருத்தரங்கினை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், “ தொழில்நுட்பம் உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலில் திமுக அரசுதான் வடிவமைத்தது. தகவல் தொழில்நுட்பத்திற்கு என தனி துறையை உருவாக்கியதும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னேறியிருப்பதற்கு காரணம் கலைஞர்தான்.
ஆசியாவிலேயே பெரிய டைடல் பார்க்கை உருவாக்கி பெருமை சேர்த்தது கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது.” என்று தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய தமிழ்நாட்டின் பரந்த மனித வளத்தைத் ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன், அரசுப் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகெங்கிலும் உள்ள மனிதவள மேம்பாட்டு நடைமுறைகள் சார்ந்த கலந்துரையாடல்களின்மூலம் தமிழ்நாட்டின் மனித வளத்தை பொருளாதார வெற்றிக்கான ஆற்றலாய் மாற்றுவதற்கான கூறுகளை கண்டறிய இம்மாநாடு வழிவகை செய்யும்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம் பல்வேறு அரசு துறைகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கிடையே வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 6,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு IT, ITeS, Banking Financial Service & Insurance, சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புடைய திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப வளர்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கிடையே வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், ஆட்டோமேஷன் & மெகாட்ரானிக்ஸ், மோஷன் கன்ட்ரோல், ரோபோடிக்ஸ் மற்றும் இயந்திர கருவிகள் உள்ளிட்ட தொழில் 4.0 (Industry 4.0) தொழில்நுட்பங்களில் திறமையாளர்கள் உருவாக்கப்படுவர்.
இம்மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப.. தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரி பாலச்சந்திரன், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் சீத்தாராம். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)