Chennai Metro: மே 1 முதல் சென்னை மெட்ரோவில் அதிரடி மாற்றம்.. உடனே இதை செய்யுங்க!
சென்னை மெட்ரோவைப் பொறுத்தவரை அவ்வப்போது பயணிகளுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி யுபிஐ சேவை, பயண அட்டை மூலம் டிக்கெட் பெற்றால் 20 சதவிகிதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் போக்குவரத்தின் உயிர்நாடியாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ச்சியாக இயங்கும் மெட்ரோ ரயிலை தினமும் லட்சக்கணக்கான உள்ளூர், வெளியூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரையும், பரங்கி மலை முதல் விம்கோ நகர் வரையும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாதவரம் தொடங்கி சிறுசேரி வரையும், பூந்தமல்லி தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மெட்ரோவில் தொடரும் மாற்றங்கள்
சென்னை மெட்ரோவைப் பொறுத்தவரை அவ்வப்போது பயணிகளுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி யுபிஐ சேவை, பயண அட்டை மூலம் டிக்கெட் பெற்றால் 20 சதவிகிதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மற்றுமொரு முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை) மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை) அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், மே 1ம் தேதி முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















