பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் புகார் தெரிவித்தனர்.

பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்துமே பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு வேலை செய்யும் 3 பெண்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் மீது பாலியல் புகார்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார் குறித்து அந்த நிறுவனத்தின் விசாகா குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை எதிர்த்து அதிகாரிகள் சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம் விசாகா குழு பரிந்துரையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தொழிலாளர் நல நீதிமன்றம் இட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி மென்பொருள் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா தலமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண்கள் வேலை பார்க்கும் மேஜைகளுக்கு பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டு அசவுகரியம் ஏற்படுத்தியதோடு, உடை அளவை கேட்டு தவறாக நடந்துகொண்டுள்ளார் என வாதத்தை முன்வைத்தது மென் பொருள் நிறுவனம்.
இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில் பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கில் பெண்கள் பின்னால் நிற்கவில்லை என்றும் உயர் அதிகாரி என்ற முறையில் அவர்களின் பணிகளை கவனிக்கவே அவ்வாறு நின்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதிகாரிகளின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடிய சொல், செயல் எல்லாமே பாலியல் துன்புறுத்தல்தான் எனத் தெரிவித்தார்.
மேலும், ”தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விசாகா குழுவின் பரிந்துரை செல்லும். பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டம், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்ததை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை முதன்மைபடுத்துகிறதே தவிர துன்புறுத்துபவர்களின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.




















