செங்கல்பட்டு அருகே குளோபல் சிட்டி: 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த திட்டம்! வேலைவாய்ப்பு, வளர்ச்சி அப்டேட்!
"செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 6 கிராமங்களில் குளோபல் சிட்டி அமைக்க சுமார் 787 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது"

"செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குளோபல் சிட்டி அமைப்பதற்காக 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது"
வளர்ச்சியில் சென்னை மாநகரம்
தமிழ்நாடு தொடர்ந்து பல்வேறு வகைகளில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை இந்திய அளவில் மிக முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து வேலை வாய்ப்புகளை தேடி சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் ஏராளமான, தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களை நோக்கி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளை விரிவு படுத்தியும், புதிய நகரத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தேவையும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
குளோபல் சிட்டி - Global City
அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் சென்னையின் புறநகர் பகுதியில் குளோபல் சிட்டி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த குளோபல் சிட்டி அமைய உள்ளது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பெருநகரங்களுக்கு அருகே துணைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) செயல்படுத்த உள்ளது.
குளோபல் சிட்டியில் என்ன வசதிகள் இருக்கும் ?
ஒரு நகரத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அதில் இருக்கும் வகையில், அந்த நகரம் கட்டியமைக்கப்படும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள், வங்கிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை இந்த குளோபல் சிட்டியில் அமைந்திருக்கும். இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கே குளோபல் சிட்டி அமைய உள்ளது ? Where Chennai Global City Location?
சென்னையில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுராந்தகம் அருகே இந்த குளோபல் சிட்டி அமைய இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள ஜானகிபுரம், பழையனூர், அத்திமணம், படாளம், கள்ளபிரான்புரம் மற்றும் புலிப்பரக்கோயில் (புலிபுரகோயில்) ஆகிய 6 கிராமங்களில் அமைய உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இந்த திட்டத்திற்காக 787 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழையனூரில் 468 ஹெக்டேர் நிலமும், ஜானகிபுரம் பகுதியில் 162 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தை பல கட்டமாக செயல்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே செயல்பட்டு வரும் மகேந்திரா சிட்டி போன்று, இந்த குளோபல் சிட்டி உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















