புதிய ஆட்சி அமையும் வரை பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் - தினகரன் எதற்காக அப்படி சொன்னார்?
செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத கும்பலால் 14வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது - டிடிவி தினகரன்

செங்கல்பட்டு அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன், திமுக ஆட்சியை அகற்றும் வரை பெண்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தான் ஒரே தீர்வு என்று கூறினார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திறனற்ற திமுக ஆட்சியில், பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி செல்லும் சிறுமிகள், கல்லூரி செல்லும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்புமே கேள்விக்குறியாகும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி எல்லாம் நடைபெறக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக கொடூர கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவால் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் சர்வசாதாரணமாகி வருகின்றன.
வீட்டை விட்டு வெளியேறும் பெண்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவதே அரிதாகிவிட்ட தமிழகத்தில், எதுவுமே நடக்காதது போல “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” எனும் தலைப்பில் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து வீண் விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக பெற்றது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, பச்சிளம் குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை அகற்றுவதற்கான காலமும், நேரமும் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் புதிய ஆட்சி அமையும் வரை பெண்கள் அனைவரும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















