Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை செல்லாதது ஏன்? என்று வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அவரை தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அவரை வரவேற்க பாஜக தலைவர்கள் பலரும் வந்த நிலையில், அண்ணாமலை வராதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
மோடியை வரவேற்க வராத அண்ணாமலை:
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு போட்டியிடும் வாய்ப்பு இந்த முறை வழங்கப்படாதது என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே, அண்ணாமலை பிரதமர் மோடியை வரவேற்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
இதுதொடர்பாக, பாஜக எம்எல்ஏ-வும் தமிழக பாஜக-வில் முக்கியமான நிர்வாகிகளில் ஒருவருமான வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் வந்த உடனே அண்ணாமலை எப்போது வருகிறார்? என்று கேட்டேன். பட்டியலில் அவர் பெயர் போட்டுதான் அனுப்பினோம். ஆனால், அவர்தான் வரவில்லை என்று கூறினார்கள். என்னவென்று விசாரிக்கிறோம். முதலில் தனித்தனி ஆதரவாளர்கள் என்று கிடையாது. அண்ணாமலையின் அன்புக்கூட்டத்தில் நாங்களும்தான் உள்ளோம். அவர் என் அன்புக்குரிய தம்பி.
தேர்தலில் இன்னும் வேட்பாளரே அறிவிக்கவில்லை. அறிவிப்பதற்கு முன்பே அவர்களுக்கு கிடைக்கவில்லை. இவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அவசியமே இல்லை. பாஜக மிகவும் கட்டுக்கோப்பான கட்சி. பாஜக-வில் எந்த நேரத்தில் யாருக்கு? என்ன நேரத்தில் என்ன பொறுப்பு வழங்க வேண்டும்? என்பது கட்சித் தலைமைக்குத் தெரியும்.
கட்சி பொறுப்பு:
ஒரு சிலருக்கு கட்சியில் உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். ஒரு சிலருக்கு கட்சியில் எம்எல்ஏ பதவி வழங்கப்படும். ஒரு சிலருக்கு எம்பி சீட் வழங்கப்படும். அனைத்தையும் அப்படித்தான் வழங்க முடியும். எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்யும். கட்சியில் சாதாரணமாக வந்து 5 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு கூட ஆசை இருக்கும். கட்சி யாருக்கு எப்படி கொடுக்க வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை யார் கொண்டு வருவார்கள்? என இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் தேர்தல் அரசியலில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போட்டியிட வாய்ப்பு மறுப்பு:
தமிழக பாஜக-வின் தலைவராக அண்ணாமலை இருந்தபோது கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை அவதூறாக பேசியபோது அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. தமிழக பாஜக-வின் தலைவராக அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகே மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
அதிமுக தலைவர்களுடன் முரண்போக்கிலே இருந்து வந்த அண்ணாமலைக்கு முக்கிய பதவி ஏதும் வழங்கப்படாமலே உள்ளது. இதனாலும் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.























