Anbumani Ramadoss: “ராமதாஸ் உத்தரவு செல்லாது; நிர்வாகப் பணிகளில் தலையிட அதிகாரமில்லை“ - அன்புமணி தரப்பு அதிரடி
அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், அவருடைய உத்தரவு செல்லாது என்றும், நிர்வாகத்தில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அன்புமணி தரப்பு கூறுகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பதிலளிக்க அவகாசம் கொடுத்தும், அவர் பதிலளிக்காததால், குற்றச்சாட்டுகள் உறுதியாகின்றன என்றும், அதனால், அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தே நீக்குவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி தரப்பு, ராமதாஸின் உத்தரவு செல்லாது என்றும், நிர்வாகத்தில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
“ராமதாஸ் உத்தரவு செல்லாது; நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரமில்லை“
பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பிற்கு, அன்புமணி தரப்பிலிருந்து பதிலளிக்கும் விதமாக பேசிய பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸிற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி விதிகளின்படி, அன்புமணியே பாமக-வின் தலைவர் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணிதான் பாமக தலைவராக தொடர்வார் என்றும் பாலு தெரிவித்துள்ளார்.
அதோடு, தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும், அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதனால், கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும், நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என்றும், ராமதாஸின் உத்தரவு பாமக-வை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணணும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வதாக கூறியுள்ள அவர், பாமக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக, பாமக-வின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இந்த தகவல்களை பகிர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்புமணிக்கு கெடு விதித்திருந்த நிறுவனர் ராமதாஸ்
பாமக-வில் நடந்துவரும் அதிகாரப் போர் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி, ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதோடு, அந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால், அந்த கால கெடுவிற்குள் அன்புமணி பதில் அளிக்காததால், கடந்த 4-ம் தேதி தைலாபுரத்தில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, செப்டம்பர் 10-ம் தேதிக்குள்(நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கும் அன்புமணி பதில் அளிக்காவிட்டால், கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றுவரை அதற்கும் அன்புமணி ராமதாஸ் பதில் அளிக்காத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும், அந்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளிக்காததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என உறுதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதனால், பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.





















