Senthil Balaji: செந்தில் பாலாஜி பதறுவது ஏன்? சதி செய்துகொண்டிருப்பது யார்? அதிமுக சரமாரி கேள்வி!
உங்கள் பதட்டம்தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.- அதிமுக.

கரூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பேரணியில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசே காரணம் என்று தவெகவினர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு, கரண்ட் கட், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூல் என தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து இருந்தார். இதை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக இப்போது வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? கரூர் துயரம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு,
- EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர்,
- டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார்,
-பொம்மை முதல்வர் வீடியோ வெளியிடுகிறார்,
-வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர்,
-இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு... இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க?
எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? "அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்து கொண்டிருப்பது யார்? திமுகதானே?
உங்கள் பதட்டம்தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்.
அப்புறம், அந்த பத்து ரூபாய்.... இந்தா வர்றோம்...
அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம். ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?
Senthil Balaji Model Institutionalised Robbery- நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை! தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை "Open-ஆகப் பேசுகிறேன்" என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?
இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், "பத்து ரூபாய்" என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது எல்லாம் கள்ள மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, Gross Negligence-ஐ மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது? ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லிதான் ED வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே Tone-ல பேசுறீங்களே... இந்த டைம் CBI வந்தா, Conditions-ah follow பண்ணுவீங்களா செந்தில் பாலாஜி?’’
இவ்வாறு அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது.























