Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? - கொந்தளிக்கும் ஜெயக்குமார்
அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறது திமுக அரசு. மாநில உரிமையை யார் தாரை வார்த்தது என நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? 4 ஆண்டுகளில் திமுக அரசு 4 கோடியே 18 லட்சம் கடன் வாங்கியுள்ளது.
உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்தது திமுக தான். மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே திமுக கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
மத்திய அரசுக்கு சொம்பு தூக்கவும் ஒத்து ஊதவும் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி விடுத்த சவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்.
எங்கள் முதலமைச்சருக்கு எல்லாம் தெரியும் என சொல்பவர்கள் ஏன் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள். அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? ” என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் மு.க.ஸ்டாலின்?
கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.
கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு
கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே?
அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன். உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி “நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கி போவதுமில்லை. அடமானம் வைப்பதும் இல்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புவது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். டெல்லியில் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த கால்களில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் எங்களுக்கு உண்டு. நாங்கள் செய்த சாதனையை பட்டியல் போட்டு சொல்கிறோம். அதில் என்ன பொய் என்று அவர் கூறட்டும். அதற்கு அப்புறம் விவாத மேடையை வைத்துக் கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

