Accident: சபரிமலைக்கு சென்று திரும்புகையில் விபத்து: 40 அடி பள்ளத்தில் கவிழ்நத கார்; 8 பேர் பலி.!
தேனி மாவட்ட குமுளி மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சபரிமலைக்குச் சென்று திரும்புகையில், நேற்று நள்ளிரவில் தேனி மாவட்ட குமுளி மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. பலியானவர்கள் தேனி மாவட்ட ஆண்டிப்பட்டி பகுதிச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் மூலம் தேனி மாவட்டம் கம்பம் வழியாக கம்பம்மெட்டில் உள்ள மலைச்சாலையில் சபரிமலை சென்றும், குமுளி மலைப்பாதை வழியாக தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சபரிமலைக்குச் சென்று திரும்பிய தேனி மாவட்ட ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கார் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குமுளி மலைச்சாலையில் வேகமாக வந்த கார் பாலத்தை கடக்க முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 40அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான காருக்கு பின் வந்துகொண்டு இருந்த வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொது மக்களுடன் மீட்புபணியில் விரைந்து ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் கயிறு கட்டி கார் கவிழ்ந்த பள்ளத்தில் இறங்கி, காருக்கு அருகே சென்றனர். அப்போது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில் 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் பலத்த காயமடைந்த இருவரை மீட்டு கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் அதிகப்படியான ரத்தக் கசிவு ஏற்படவே சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 8 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















