Vairamuthu: சமூக ஊடகங்களால் பெரியாரின் பிம்பத்தை உடைக்க முடியாது - வைரமுத்து
பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என்று பெயர் வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதைத்தான் சற்று மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும் என்றார்.

சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெற்றி தமிழர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த சமூக சேவையாளர்களுக்கு கேடயம் வழங்கியும் கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, சமூக ஊடகங்களின் வளர்ச்சி தன்னை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதாகவும், சமூக ஊடகங்களால் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிம்பங்களை உடைக்க முடியாது என்றார். நாட்டில் தீமைகளை சொல்லவே பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் உள்ளன. ஆனால் இவர்களுக்கு நடுவே நாட்டின் நன்மைகளை சொல்ல வெற்றி தமிழர் பேரவை உள்ளது. முதலில் இந்த பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என்று பெயர் வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதைத்தான் சற்று மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும் என்றார்.
வெற்றி தமிழர் பேரவையில் உள்ள அனைவரும் மது அருந்துபவர்கள் கிடையாது. இதனால்தான் பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிவித்த அவர் கிராம பகுதியில் 50 வயதுக்கு மேல் யாருக்கும் ஆயுள் இல்லை தலை நரைத்துப் போகும் முன்னே குடியால் இறந்து போகிறார்கள். "மூத்த குடிமக்கள் இல்லாத ஊர் தலையில்லாத முண்டம் போல". எனவே குடியிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த பேரவையின் லட்சியம் என்றார்.
உடலில் கண்கள் மட்டும்தான் பொய் பேசாது, கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். ஆனால் தற்போது செவியோடு செவி கேட்டு பேசுவதுதான் அதிகரித்துள்ளது. சின்ன சின்ன தோல்விகளால் வாழ்க்கை செதுக்கப்படுகிறது. தமிழன் முன்னேற வேண்டும் என்பதே இந்த பேரவையின் நோக்கம் என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

