ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து நீட் தேர்வில் முதல்முறையாக தேர்ச்சி பெற்ற மலைவாழ் மாணவி நிவேதா - கனவு நிறைவேற அரசு உதவிட கோரிக்கை.

ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா. சேலம் மாவட்ட சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 65 மலை கிராமங்கள் உள்ளன. ஏற்காடு பிரதான பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் பள்ளத்தாக்கில் உள்ளது எழில் கொஞ்சும் குண்டூர் கிராமம். சுற்றுலாப் பயணிகளின் கண்ணைக் கவரும் பசுமைப் போர்வை போர்த்தி நிற்கும் இந்த மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரிய தொழில்வாய்ப்பு இல்லாத நிலையில், காபி தோட்டத் தொழிலுக்கும் கூலி வேலைக்கும் செல்வதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. 6-ம் வகுப்பு முதல் கல்வி கற்க 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காட்டிற்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளின் கல்வி பயணம் சிறுவயதிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. இதுபோன்ற பல தடைகளைத் தாண்டி ஏழுமலை-மணிமேகலை தம்பதியின் மகள் நிவேதா நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், 245 மதிப்பெண்கள் பெற்றும் மாணவி நிவேதா முதல்முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘மாணவி நிவேதா 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றுள்ளார். இதனால் அரசுப்பள்ளி மாணவியருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி நிவேதா இடம் பெறவில்லை. அரசு கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கூலித் தொழிலாளர்களான தங்களால் மருத்துவக் கல்வி பயில வைக்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவி நிவேதா கூறுகையில், “மழையின்போது ஒழுகாத வீடில்லை. அகலமான சாலையில் வீட்டிற்கு வாகனத்தில் போய் இறங்கக் கூடிய வாய்ப்பில்லை. நினைத்ததை நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்யக் கூடிய இணையதள வசதியில்லை. நிறைய இல்லைதான். ஆனால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு” என்றார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















