சேலத்தில் பயங்கரம்.. இடம் தராததால் ரயிலில் இருந்து இளைஞர் தள்ளிக்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம் வழியே சென்ற ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த வாலிபர் தகராறு ஏற்பட்டு கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள குறும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் தனியார் பணியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா, பங்குனி உத்திர திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வேண்டுதல் வைத்துள்ளார். இதனால் நவீன் விடுமுறை எடுத்துக்கொண்டு, நேற்று நள்ளிரவு திருப்பூரில் இருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து பொம்மிடி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது நவீன் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் நவீனிடம் படிக்கட்டில் அமர இடம் கேட்டார். அப்போது நவீனுக்கும் பஜாஜ் டுட்டூக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த பஜாஜ் டுட்டூ, நவீனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் நவீன் ரயில் பாதையில் விழுந்துள்ளார். ரயில் தண்டவாளத்தில் நவீன் சிக்கியதால் உடல் துண்டு துண்டாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும், சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஜோலார்பேட்டையில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே காவல்துறையினர் ஜார்கண்ட் மாநிலத்த சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்தனர். பொம்மிடி அருகே இறந்து கிடந்த நவீன் சடலம் மீட்கப்பட்டு உடல் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய காவல் நிலைய ஆய்வாளர் சிவ செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூவை கைது செய்து விசாரித்து வருகிறார். ரயிலில் இருந்து இளைஞர் வட மாநிலத்தைச் சேர்ந்தவரால் தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

