வீட்டின் முன்பு குப்பை... லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரால் பரபரப்பு
ஆத்திரத்தில் அங்கு நிறுத்தியிருந்த லாரியை ஓட்டி வந்து, வீட்டின் முன்பாக நின்றிருந்த அனிதா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது மோத முயன்றார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்துள்ள அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகள் அனிதா. இவர் நேற்று முன்தினம் காலை, தனது வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பூபதி என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, இருதரப்பிலும் திரண்ட சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பூபதியின் உறவினரான டிரைவர் பாலமுருகன் என்பவர், ஆத்திரத்தில் அங்கு நிறுத்தியிருந்த லாரியை ஓட்டி வந்து, வீட்டின் முன்பாக நின்றிருந்த அனிதா மற்றும் அவர்களது உறவினர்கள் மீது மோத முயன்றார். இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியடைந்த அனிதா தரப்பினர், நாலாப்புறமும் அலறியடித்தபடி ஓடி உயிர்தப்பினர். தொடர்ந்து வேகமாக சென்ற லாரி, அனிதா வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதில், காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லாரி மோத வந்த போது, தப்பிக்க ஓடி கீழே விழுந்ததில், அனிதா மற்றும் பூபதி தரப்பை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் ஊரக போலீசார், டிரைவர் பாலமுருகன் மீது கொலை முயற்சி, பொருட்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள பாலமுருகனின் மனைவி செல்வி என்பவர், அனிதா தரப்பினர் தங்களை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரிலும், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதனிடையே, பாலமுருகன், அனிதர் தரப்பினர் மீது லாரியை ஏற்ற முயன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப உள்ளது.

