மேலும் அறிய
மேக்கப் எங்களுக்கும்தான்.. பொங்கலையொட்டி அதிரடி காட்டும் கால் நடைகளுக்கான அலங்கார பொருட்களின் விற்பனை..
தொடர் மழை காரணமாக அரூர் அடுத்த வார சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைவு - கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வருகை.

கால் நடைகளுக்கான அலங்கார பொருட்களின் விற்பனை
தருமபுரி மாவட்டம் அரூர் எடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் கால்நடை சந்தைகள் நடைபெறுகிறது. இந்த வார சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும், வியாபாரிகளும், கால்நடைகளை வாங்குவதற்கும், விற்கவும் வருகின்றனர். இந்த வார சந்தையில் வாரந்தோறும் ஒரு கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மேலும் தீபாவளி, பொங்கல், ஆடி, ரமலான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

இந்நிலையில் பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வார சந்தைக்கு விவசாயிகளின் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் தொடர் மழை காரணமாக தீவன தட்டுப்பாடு இல்லாததால், கால்நடைகள் வரத்தும் குறைந்தது. இன்று நடைபெற்ற வார சந்தையில் 1000-க்கும் குறைவான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. மேலும் ஆடுகள் ரூ. 10 லட்சத்திற்கு விற்பனையானது. அதேபோல் மாடுகள் 500க்கும் குறைவாகவே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் மாடுகள் ரூ.30 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.60 லட்சத்திற்கு மேல் மாடுகள் மட்டுமே விற்பனையான நிலையில், தொடர் மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்து, பாதி அளவுக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அடுத்த வாரத்தில் கால்நடைகள் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும் என்று விவசாயிகள், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரம் உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும் வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன் இன்னும் 2 சந்தை இருக்கிறது. ஆனால் அலங்கார பொருட்கள் விற்பனை மற்றும் விலை அதிகரிக்கும் என்பதால், இந்த வாரமே ஒரு சில விவசாயிகள் அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தால், போதிய வருவாய் இல்லாமல், பெரும்பாலான விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த மழை பெய்துள்ளதால், கடந்த ஆண்டை விட, விற்பனை மற்றும் வருவாய் அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அடுத்த வாரம் விற்பனை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















