மேலும் அறிய
Advertisement
தருமபுரி: பட்டுக்கூடு அங்காடியில் ஏலம்... தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர கோரிக்கை!
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுவதால் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு வைப்பதற்கான இடத்தை அதிகப்படுத்தி,விவசாயிகளுக்கு தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர கோரிக்கை.
தருமபுரியில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த பட்டுக்கூடு அங்காடி தமிழகத்திலேயே மிகப்பெரிய அங்காடி என்பதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தினமும் இந்த பட்டுக்கூடு அங்காடியில் 5 முதல் 8 டன் வரை பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படுகிறது. இந்தப் பட்டுக்கூடு அங்காடியில் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்கப்படுவதால், பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பட்டுக்கூடு அங்காடி இருந்தாலும் தருமபுரி அங்காடிக்கு வருகின்றனர்.
இந்நிலையில் அன்றாடம் நடைபெறும் இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகள் கொண்டு வருகின்ற பட்டுக்கூடுகளை தனித்தனியாக கொட்டி வைப்பதற்கு, இரும்பு ரேக் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் விவசாயிகள் அதிகாலையிலேயே பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பட்டுக்கூடுகளை வாங்குவதற்காக வரும் நூற்பாளர்கள், காலையில் பட்டுக்கூடுகளை பார்த்து தரமான பட்டு கூடுகளை மட்டுமே ஏலம் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு ஏலம் எடுக்கும்பொழுது சிலர் குழுவாக இணைந்து ஒரு சில பட்டுக்கூடுகளை மட்டுமே நல்ல விலைக்கு கேட்பதும், மற்ற பட்டுக்கூடுகளை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வருகின்ற விவசாயிகள் விற்பனையானால் போதும் என்கின்ற மனநிலையில் குறைந்த விலைக்கு கொடுத்து விடுகின்றனர். அதேபோல் வெளியூரிலிருந்து பட்டுக்கூடுகளை வாங்குவதற்காக வரும் நூற்பாளர்களும், உள்ளூரில் இருப்பவர்கள் தரமானதை எடுத்துக் கொண்டு கழித்து விடுவதையே வாங்கி செல்கின்ற நிலையும் இருந்து வந்தது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பட்டுக்கூடு விவசாயிகள் மற்றும் நூற்பாளர்களுக்கு போதிய விலையும் தரமான பட்டுக்கூடுகளும் கிடைக்காத சூழல் இருந்து வந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் ஏலம் விடும் நடைமுறை இணையதளம் மூலம் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. இதில் அதிகாலையில் விவசாயிகள் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளை தனித்தனியாக வைத்து அதனை பட்டுக்கூடு அங்காடி ஊழியர்கள் எடை போட்டு தரம் பிரித்து விடுகின்றனர். மேலும் ஒவ்வொரு பட்டுக்கூடுகளுக்கும் அங்காடியின் சார்பில் நம்பர் ஒதுக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர். இதில் தினமும் காலை 11 மணிக்கு மேல் பட்டுக்கூடு அங்காடியில் ஏலம் தொடங்குகிறது. இந்த ஏலத்தினை தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை இணையதளத்தில் சென்று பட்டு நூற்பாளர்கள் தேவையான பட்டுக்கூடுகளை ஏலம் கேட்கலாம். இதில் பட்டு நூற்பாளர்கள் அனைவரும் தங்களது செல்போன்களிலேயே இந்த இணையதள வசதியை பதிவிறக்கம் செய்து இணையதளத்தின் மூலமாகவே ஏலம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் பட்டுக்கூடு எடுத்து வந்துள்ள விவசாயிகள் தங்களது பட்டுக்கூடுகளுக்கு எவ்வளவு விலை கிடைக்கிறது என்பதனை பட்டுக்கூடு அங்காடியில் ஒரு சிறிய தொலைக்காட்சி மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் பட்டுக்கூடுகளை ஏலம் எடுத்த நூற்பாளர்கள் அங்காடியில் முழு பணத்தை செலுத்தி விட்டு அந்த பட்டுக்கூடுகளை எடுத்துச் செல்கின்றனர். இந்த இணையதள வசதியில் ஆன்லைன் மூலம் விடப்படும் ஏலத்தால் பட்டுக்கூடு எடுத்து வரும் விவசாயிகளுக்கும் போதிய விலை கிடைக்கிறது. அதே போல் பட்டு நூற்பாளர்களும் தங்களுக்கு தேவையான பட்டுக்கூடுகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால் இருவருக்குமே மிகுந்த வசதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். சாதாரண ஏலத்தில், குழுவாக சிலர் செயல்படுவதால் விவசாயிகளுக்கு நூற்பாளர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த இணையதள வசதியில் இது போன்ற எந்த பாதிப்புகளும் இல்லாமல் இருப்பதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பட்டுக்கூடுகள் ஏலத்தை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்கு சிறிய அளவிலான தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதில் தெளிவாகத் தெரிவதில்லை. எனவே அகன்ற திரை கொண்ட தொலைக்காட்சியை வைக்க வேண்டும். இந்த பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளை வைப்பதற்கு போதிய இட வசதி இல்லை. கீழே கொட்டி வைப்பதால், மழை காலங்களில் நனைந்து விடுகிறது. அதேபோல் வெளியில் இருந்து வரும் விவசாயிகளுக்கு தங்குவதற்கு இடம் மற்றும் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion