Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு - காரணம் என்ன?
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,250 கனஅடியாக அதிகரிப்பு .

சேலம் : காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டதால், மேட்டூர் நீர் திறப்பு 35,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 12,900 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வினாடிக்கு, 28,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று இரவு, 8 மணிக்கு, 35,250 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் இரவு, வினாடிக்கு, 27,500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று இரவு, 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில், 22,100 கனஅடி நீர் மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கும், 12,900 கனஅடி உபரி நீர், 16 கண் மதகு வழியே காவிரியிலும் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 கனஅடி, அதன் நீர் இருப்பு 93.47 டிஎம்சி உள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - 13வது நாளாக அங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை
தர்மபுரி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினானடிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 13வது நாளாக அங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அங்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு, 7 மணிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொடர்ந்து, 13வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை போலீசார், மடம் செக்போஸ்டிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர்.





















