Mettur Dam : மேட்டூர் அணை நீர் வரத்து சரிவால் உபரி நீர் போக்கி மூடல்! டெல்டா பாசனத்திற்கு என்ன நடக்கும்?
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டது.

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு எதிரொலி உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று 6வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை தணிந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக சரிந்து வந்தது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,300 கன அடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்த காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதகுகள் 2 நாட்களுக்கு பிறகுமூடப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 3வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 24,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக குறைந்துள்ளது. அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உட்பட அருவிகளில், தண்ணீர் சீராக கொட்டியது. தொடர்ந்து, 5வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது.





















