DMK Congress Alliance: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை என்ன ஆச்சு.! கூடுதல் தொகுதிக்கு ஓகே ஆச்சா.? நடந்தது என்ன.?
DMK Congress Alliance: தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி போன்ற கோரிக்கையை மீண்டும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- தொகுதி உடன்பாடு தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த டி ஆர் பாலு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், அ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை வழங்கியது.
திமுக- காங் இழுபறி
அதேநேரம் கடந்த டிசம்பர் மாதம் முதல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்து காத்திருந்தது. ஆனால் திமுகவோ காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்காமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் கட்சியின் டிமாண்ட் தான் என தகவல் வெளியானது. ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வழங்க வேண்டும், கடந்த முறையை விட கூடுதல் தொகுதுகள் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. ஆனால் திமுக தரப்போ காங்கிரஸ் கட்சி கோரிய ஆட்சியில் பங்கும் கொடுக்க முடியாது. கூடுதல் தொகுதிகளும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை.?
இதனால் திமுக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் காங்கிரஸ் தலைவர் மறுத்திருந்தார். இந்த நிலையில் எப்போது காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த திமுக குழு தலைவர் ஸ்டாலினிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை பதவி
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளோம். அவர்களும் ஆலோசித்து சொல்வதாக கூறியுள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை ஒரு இடம் தருவதாக முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி இயற்கையான கூட்டணி சிதைக்க நினைக்க வேண்டாம் என கேட்டுக்கொளவதாக கூறினார்.
மதவாதிகளை விரும்பாத கூட்டணியாக இந்த கூட்டணி உள்ளது. பாஜக ,அதிமுகவிற்க்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை உறுதியாக உள்ளோம் எனவும் தெரிவித்தார். தவெக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கேயும் தவெகவுடன் பேச்சுவார்த்தை என கிரிஷ் சோடங்கர் பேசவில்லை. எனவே கூட்டணி தொடர்பாக தவறாக பேசினால் மான நஷ்ட வழக்கு போடுவோம் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார். இதையடுத்து பேசிய கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைப்பெற்றது. எங்கள் விருப்பத்தை திமுக குழுவிடம் கூறியுள்ளோம் என தெரிவித்தார்.























