விஜய் ஏன் இதை செய்யல? பெரியார் குறித்து அவதூறு.. கிடுக்கிப் பிடி கேள்வி கேட்ட திருமா!
பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய அவர், "அதிமுக கூட்டணியை பொறுத்த அளவில் பாஜக தான் வழி நடத்துகிறது என்பதை அமித்ஷாவை வைத்து அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
"அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம்"
என்னைப் பொருத்தவரையில் அதிமுக அமைதியாக இருக்கிறது. பாஜக தான் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அதனால் அந்த கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது என்பது எனது பார்வை. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும்.
தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டாக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற திராவிட தலைவர்கள் வந்த திராவிட கட்சியிலிருந்து சென்றவர்தான் பாஜகவின் தலைவர் நைனார் நாகேந்திரன். அதை தெரிந்துதான், அவரை தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் பாஜகவினர்.
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம். இதை எப்பொழுது அதிமுக உணரப்போகிறது. நாங்கள் இரண்டு சீட்டாக குறைந்தாலும், நாங்கள் ஆண்ட கட்சி அல்ல. இப்பொழுதும் 65 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. ஆண்ட கட்சி. அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா பாஜக அதை நோக்கி செயல்படுகிறதா இல்லையா?
விஜய் குறித்து திருமா கருத்து:
பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களை பற்றி முருகர் மாநாட்டில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடன் எப்படி பயணிக்கிறார்கள். பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் பாஜக, சங் பரிவார அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமமானது" என்றார்.
திமுகவுடன் பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் நீங்கள் அந்த கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமா, "இது ஒரு யூகமான கேள்வி. அது நடந்தால் பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் 2011 தேர்தலில் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்திருக்கிறது. அதன்பிறகு பாமகவின் நடவடிக்கைகளால் தான் நாங்கள் பல அவதூர்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்து கூலிப்படையினர் சுற்றி வளைக்கும் நிறை ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் எடுத்த நிலைப்பாடுதான்.
அவங்கள வேறு எப்படி சொல்ல முடியும்?
திமுகவை எதிர்க்கும் கட்சிகளை பாஜகவின் B Team என கூறிவிட்டு, அதன் பிறகு அவர்கள் திமுகவிலேயே போய் இணைகிறார்கள் என்பது குறித்து கேட்டபோது, "பாஜகவினர் பேசும் வலதுசாரி அமைப்புகள் குறித்து பேசும் பொழுது அவர்களின் பி டீம் என குறிப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பாஜகவின் கொள்கைகள் அண்ணா, பெரியார் கழகங்கள் இல்லாத ஆட்சி என்பது போன்ற கொள்கைகள் இதுபோன்ற அதே அரசியலை பேசினால் பி டீம் என்று கூறாமல் வேறு எப்படி சொல்ல முடியும். இது, திமுகவை மட்டும் எதிர்ப்பது கிடையாது.
சமூகநீதிக்கு எதிராக பாஜக பேசுகிறது. அதே அரசியலை வேறு பெயரில் பேசினால் அதை அப்படித்தான் கூற முடியும். கமலஹாசன் திமுகவுடன் வந்திருக்கிறார் என்றால் அவர் தொடக்கத்தில் பேசிய அரசியலுக்கும் இப்போது பேசும் அரசியலுக்கும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பிஜேபி எதிர்ப்பு, வலதுசாரி எதிர்ப்பு என்ற கொள்கைகளை கையில் எடுக்கும் பொழுது திமுகவில் இணைந்திருக்கலாம்.
மைய வாதம் பேசி நடுநிலையாக இருந்து கொண்டிருக்க முடியாது. ஏதாவது ஒரு சார்பு எடுத்து தான் அரசியல் பண்ண வேண்டிய தேவை இருக்கிறது என உணர்ந்து இருக்கலாம். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் அவருக்கு கூறி இருக்க வேண்டும்.
பெரியாரைப் பற்றி அவதூறு பரப்பிய பிறகும் அவர் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றால் உண்மையாகவே பெரியாரை ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது" என்றார்.





















