TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வை திடீரென ரத்து செய்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கனவை சிதைத்த திமுக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசால் டிஎன்பிஎஸ்சி-யால் குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
விளம்பர மாடல்:
அரசுப் பணி என்கிற கனவோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
யாருக்காக?
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது?
நிர்வாகத் திறமையின்மை:
இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ? என்ற ஐயம் எழுவது இயல்பே.
எந்த முறைகேட்டை மறைப்பதற்கு?
இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாடம் புகட்டுவது உறுதி:
வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.























