ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.. கனிமொழியிடம் நேரில் மனு அளித்த மக்கள்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு எதிரொலியாக மூடப்பட்டது. இந்த ஆலையில் பணியாற்றி வந்த பணியாளர்கள் இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தூத்துக்குடி எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை:
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, "தூத்துக்குடி பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்தனர். ஒப்பந்த தொழிலாளர்களாக 3,500 பேர் வரை பணியாற்றி வந்த நிலையில் அங்கு மக்களுக்கு பெரும் வாழ்வாதாரமாக அந்த ஆலையே அமைந்தது.
மேலும் பலர் அந்த ஆலையை நம்பி கடன் உதவித் தொகை மூலமாக கனரக வாகனங்கள் டிப்பர் லாரிகள் ஆகியவற்றை வாங்கி இயக்கி வந்தனர். ஆனால், திடீரென்று அந்த ஆலை மூடப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு கடன் சுமையால் தவித்து வாகனங்களை விற்றுவிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
காப்பர் தேவை:
இந்தியா நமது காப்பர் தேவைக்கு இறக்குமதியை மட்டுமே முன்னர் நம்பி இருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்தது.
இந்திய வளர்ச்சியை விரும்பாத அந்நிய சக்திகள் இங்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்காரர்களை தூண்டினார்கள். சீனா போன்ற நாடுகள் அவர்களுக்கு பணம் வழங்கி ஊக்குவித்ததால் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கேன்சர் பாதிப்பு ஏற்படும் என்றும் பொய் செய்திகள் மிக வலுவாகப் பரப்பப்பட்டது.
கேன்சர் பாதிப்பா?
அப்போது உண்மைகளை சரிவர உணராமல் போனதால் ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. உண்மையில் அங்கு யாருக்கும் கேன்சர் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்க தயாரக உள்ளோம்.மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புற சூழலை பாதுகாக்க முறையான முயற்சிகள் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஜன் தயாரிப்பு:
வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி ஸ்டெர்லைட் ஆலை சமூகப் பொறுப்போடு பல நலத்திட்டங்களை செய்து வந்தது. ஆலை 2018ம் ஆண்டில் மூடப்பட்டாலும் கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க முன்வந்தது.
உச்சநீதிமன்ற அனுமதியோடு சுமார் 2266 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் நமது பல மாவட்டங்களுக்கும் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் சுமார் 300 பேர் அங்கு பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நிலையில் அதுவும் தற்காலிக வேலை ஆகிவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும் தூத்துக்குடி கிராம மக்களுக்கு அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகைகள், இலவச மருத்துவ முகாம்கள், திருமண உதவித்தொகைகள், இளைஞர் திறன் மேம்பாட்டு திட்ட உதவிகள் ஆகியவை நிறுத்தப்படவில்லை. சுமார் 11 கிராமங்களுக்கு இன்றளவும் குடிநீரும் அனுப்பி வருகிறார்கள். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் வழங்கி உள்ளனர்.
மீண்டும் திறக்க வேண்டும்:
இத்தகைய பயன்களைக் கொண்ட அந்த ஆலையை மூடிவிட்டதால் தொழில் வளர்ச்சி குறைந்து, நல்ல வருமானம் வாழ்வாதாரம் ஆகியவற்றை இழந்து வறுமையால் மனச்சோர்வுற்று குடிக்கு அடிமையாகி இளைஞர்கள் சமூக குற்றங்களில் ஈடுபடும் சூழல் ஏதும் உருவாகாமல் தடுக்கவும் தூத்துக்குடி சிறந்த சீரான வளர்ச்சியை நோக்கி முன்னேறவும் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, கடந்த 2018ம் ஆண்டு மாபெரும் பேரணி நடந்தது. அந்த பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது.





















