பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!
தொகுதி மறுவரையறையை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்: விழுப்புரத்தில் திருமாவளவன் பேட்டி

விழுப்புரம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்தை எதிர்கொள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தொகுதி மறுவரையறை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்:
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசு அறிமுகப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. வரும் வாரம் அறிமுகப்படுத்தவோ அல்லது இதற்காக சிறப்பு கூட்டத் தொடரை நடத்தவோ வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும், ரவிக்குமாரும் பங்கேற்கிறோம்.
அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலகட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஒன்று பட்டு நின்றதன் விளைவாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் அதனை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. நாளை நடைபெறவுள்ள கலந்தாய்வு கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.
விவசாயிகளுக்கு இழப்பீடு:
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பரிசளிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் குரலைத்தான் அனைத்து கட்சிகளும் எதிரொலிக்கும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை பரிசளிக்க வேண்டும்.
தமிழக அரசுக்குப் பாராட்டு:
கடுமையான நிதி நெருக்கடி உள்ளது இந்திய ஒன்றிய அரசும் வஞ்சகம் செய்து வருகிறது இந்நிலையில் எந்த ஒரு திட்டத்தையும் நிறுத்தாமல் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அப்படியே நடைமுறைப்படுத்த இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.
புதிய திட்டங்களை வரும் காலங்களில் கொண்டு வருவார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. பொருளாதார நெருக்கடி உள்ளது. நெருக்கடி நிலையை சமாளிக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. இந்நிலையில் தான் கடந்த கால திட்டங்களை எதையும் நிறுத்தாமல், பெயர் மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















