இன்று இரவு திமுகவில் இணைகிறாரா அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி?
அமமுக துணை பொது செயலாளர் ரெங்கசாமி திமுகவின் இணைய உள்ளாராம். பாபநாசம் தொகுதியை ஒதுக்காததால் இந்த முடிவை எடுக்க உள்ளாராம்.

காத்திருந்து... காத்திருந்து கடைசியில் சோகம்தான் மிஞ்சியது என்று வெகுவாக அப்செட் ஆகியுள்ளார் பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு ஒதுக்காததால் அக்கட்சியின் துணை பொது செயலாளரான ரெங்கசாமி. அவரது ஆதரவாளர்களின் வேண்டுகோளின் படி இன்று இரவு திமுகவில் இணைய உள்ளாரா? என்பதுதான் இப்போது அரசியல் அரங்கை பற்ற வைத்துள்ளது.
உங்களை நம்பிய எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று மனக்குமுறலுடன் இருக்கிறாராம் ரெங்கசாமி. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி, குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி குறித்தும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. வரும் 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக உள்ளன. வரும் தினங்களில் எந்த தொகுதியில் யார்? யார் போட்டி என்று தெரிய வந்து விடும்.
இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் பாஜகாவிற்கு 27 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளிலும், பாமகவிற்கு 18 தொகுதிகளிலும், தமாகவிற்கு 5 தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதியும், தமமுகவிற்கு 1 தொகுதியும், ஐஜேகவிற்கு 2 தொகுதியும் என பங்கீடு செய்து நேற்று முன்தினம் கூட்டணி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் அமமுகவிற்கு திருவயைாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்குதான் ஆரம்பித்தது பிரச்சினை.
அமமுக துணை பொதுசெயலாளராக இருப்பவர் ரெங்கசாமி. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது 2011, 2016, ஆகிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்பு அக்கட்சி எடப்பாடி
பழனிசாமியிடம் சென்றபோது சில மனகசப்பு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கி காலத்தில் இருந்து அவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் ரெங்கசாமி. டிடிவி. தினகரனுடன் சென்றதால் ரெங்கசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. ஆனால் அதற்கு கவலைப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக டிடிவி. தினகரனுடன் அரசியல் களத்தில் செயலாற்றி வருகிறார். இதனால் அவருக்கு துணை பொதுசெயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மேலும் 2019 இடைதேர்தலிலும் தஞ்சை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். விட்டதை பிடித்தே தீர வேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் தலைமையிடம் சீட் கேட்டு இருந்தார். மேலும் பாபநாசம் தொகுதியில் அனைத்து வேலைகளையும் கிடுகிடுவென்று செய்து இம்முறை கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று ஆதரவாளர்களை முடிக்கி விட்டார். ஆனால் திடீரென்று பாபநாசம் தொகுதியை அமமுகவிற்கு வழங்காமல் திருவையாறு தொகுதியை வழங்கியதால் ரெங்கசாமி மிகவும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி விட்டாராம்.
இந்த தொகுதி மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் டிடிவி.தினகரன் உருவ பொம்மையை எரிக்கும் அளவிற்கு சென்று பாபநாசத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி விட்டனர். இத்தனை ஆண்டுகள் டிடிவி. தினகரனுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணம் செய்தவருக்கே இந்த நிலையா என்று ரெங்கசாமியின் ஆதரவாளர்கள் கொதிநிலையில் உள்ளனர்.
இதற்கிடையே தலைமை கழகம் சார்பில் அவரை அழைத்து சமாதானம் செய்ததாகவும், அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. கொடுத்தால் பாபநாசம் தொகுதியை கொடுங்கள், இல்லையென்றால் ஆளை விட்டுவிடுங்கள் என்ற ரேஞ்சிற்கு ரெங்கசாமி மிகவும் வேதனையுடன் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக உங்களை நம்பி என்னுடைய எம்எல்ஏ பதவியும் பறிபோனது. இப்போ உங்களை நம்பி பாபநாசம் தொகுதியில் நான் போட்டியிட போகிறேன் என்ற கனவும் கானல் நீராகிவிட்டது என உச்சக்கட்ட கோபத்தை ரெங்கசாமி வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் போதும் மண் குதிரையை நம்பி ஆற்றில் மூழ்கிவிட்டோம். இனியாவது பிழைத்துக் கொள்வோம் என்று உசுப்பேற்றி விட்டுள்ளனராம். இதனால் ஓ.பி.எஸ். போல் திமுகவில் இணையலாமா? அல்லது என்ன செய்யலாம் என்று ஆதரவாளர்களுடன் ரெங்கசாமி ரகசிய ஆலோசனை நடத்தினாராம். இதில் திமுகவில் இணையலாம் என்பதுதான் மெஜாரிட்டி கருத்தாக இருந்ததாம். இந்த தகவல்கள் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு எட்ட அவர் மூலம் ரெங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இனியும் காத்திருந்தால் இலவு காத்த கிளி நிலையாகி விடுவோம் என்று இன்று இரவு திமுகவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறார் என்று கூறப்படுகிறது. உலா வரும் இந்த தகவல்களுக்கு ரெங்கசாமியோ, அவரது ஆதரவாளர்களோ உண்மை என்று தெரிவிக்கவும் இல்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்கள் உண்மையா என்பது குறித்து அறிய முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி அவர்களை செல்போனில் நம் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றோம். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்






















