”ஒன்றிணைந்து செயல்படுவோம்” ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி அழைப்பு! அதிர்ச்சியில் தவெக..
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நிலையில் வெற்றி பெறும் வரை ஜனநாயகத்தின் ஆன்மாவை காப்பதற்கான போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்துவோம் என ரியாக்ட் செய்துள்ளார் ராகுல்காந்தி.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று தன்னுடைய 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது பதிவில், ”மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என சொல்லியிருந்தார். ஆனால் எப்போதும் சொல்லும் பிரதர் என்ற வார்த்தையை ஸ்டாலின் தவிர்த்திருந்தார்.
இந்தநிலையில் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே. இந்தியாவின் பன்முகத்தன்மை, நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு மன உறுதி நம்மை தொடர்ந்து வழிநடத்தும் - இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இந்தப் போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்துவோம்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என மெசேஜை திமுகவுக்கு ராகுல்காந்தி சொல்லியிருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். திமுக கூட்டணியை முறித்து கொண்டு சென்ற காங்கிரஸ் தவெகவுடன் கைகோர்த்தது. இதனால் காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக இருக்கிறதா இல்லை என்ற விவாதம் வந்தது. தேசிய அளவிலான கூட்டணியில் திமுக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக சொல்லவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். இந்த நேரத்தில் ஒன்றிணைந்து போராடுவோம் என சொல்லி ராகுல்காந்தியும் தேசிய அளவிலான கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















