கூட்டணி கட்சிக்கு கூடாது... அத்தனையும் நமக்குதான்: போர்க் கொடி தூக்கியுள்ள திமுகவினர்
அறந்தாங்கி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது. திமுகவே போட்டியிட வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சீனியார், சக்தி ராமசாமி கருத்து தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: அதெல்லாம் முடியாது புதுக்கோட்டை நம்ம கோட்டை. அதனால இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர்கள்தான் போட்டியிடணும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடாது என்று திமுகவினர் போர்க் கொடி தூக்கியுள்ளது அரசியல் அரங்கை தெறிக்க விட்டுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் விராலிமலையில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மீதமுள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் திமுகவும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் முறையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை இப்போதே அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன. நிர்வாகிகளை சந்திப்பது, தேர்தல் வியூகம் அமைப்பது என்று தீவிரம் காட்டி வருகின்றன. புதுக்கோட்டையில் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தனித்தனியாக சமீபத்தில் நடந்தது.
அதில், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம் மற்றும் அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகளுக்கான கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது. அந்த தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று முதல் குரலாக முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சீனியார், சக்தி ராமசாமி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பேசும்போது, ”அறந்தாங்கியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக உள்ள திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனின் நெருக்கமான உறவினர் ஒருவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இவரும் அக்கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருக்கலாம். எனவே அறந்தாங்கி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஒரு பூமராங்கை வீசினார்.
அதேபோல, வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை(தனி) மற்றும் விராலிமலை ஆகிய 3 தொகுதிகளுக்கான கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கவிதைப் பித்தன் நொந்து போய் பேசியிருக்கார். அவர் பேசும்போது, “கடந்த தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் நானும் விருப்ப மனு கொடுத்திருந்தேன். வெற்றி பெற்று அமைச்சராகி விடலாம் என்ற நியாயமான ஆசையில் இருந்தேன். ஆனால், தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டனர். அந்தத் தேர்தலில் ஒரு கப் டீ கூட வாங்கிக் குடிக்காமல், பத்து பைசா கூட செலவு செய்யாமல் எம்.சின்னதுரையை வெற்றி பெறச் செய்தோம்.
மறுபடியும் அதே கட்சிக்கு கொடுத்தாலும் சரி, திமுகவுக்கு கொடுத்தாலும் சரி வெற்றி உறுதி” என பேசிக்கொண்டிருக்கும் போதே, ”இந்த முறை தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது, திமுகவே போட்டியிட வேண்டும். கட்சித் தலைமையை கடுமையாக வலியுறுத்த வேண்டும்” என அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் திடுதிப்பென்று எழுந்து கூச்சலிட்டுள்ளனர்.
அவர்களை அமைதிப்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு, ”கருத்துகளை கட்சித் தலைமைக்கு கொண்டு செல்கிறேன். முடிவை கட்சித் தலைவர்தான் எடுப்பார்” என தெரிவித்தார்.
அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை ஆகியோர் அவரவர் கட்சியின் தலைவர்கள் மூலம் திமுக தலைமையிடம் பேசி மீண்டும் சீட் பெற்று போட்டியிடுவதற்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது, 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் திமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது கூட்டணிக் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. போன முறை ஜெயிச்சுட்டோம். ஏதோ தொகுதிக்கும் கொஞ்சம் செஞ்சு இருக்கோம். இதை வைச்சு இந்த முறையும் ஜெயிச்சு எம்எல்ஏ ஆகிடலாம்னு நினைச்சா... இவங்க அடிக்க களேபரத்துல நம்ம கனவு சிதைஞ்சிடும் போல இருக்கே என்று கலக்கத்துடன் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்காங்களாம்.





















