புதுச்சேரி தேர்தல் களம் : பாஜகவை கழற்றிவிட்டு , விஜய்யுடன் கூட்டணி? ரங்கசாமி அதிரடி திட்டம்! பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தல் குறித்து பாஜக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது ஆளுநர் தலையீடு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கூட்டணி பேச்சுவார்த்தை தவிர்த்த முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தல் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது ஆளுநர் தலையீடு உள்ளிட்ட பிரச்சினைகளை முதலமைச்சர் ரங்கசாமி சுட்டிக்காட்டி கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
புதுச்சேரியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், கூட்டணியில் இருந்து பாஜக வை கழற்றி விடுவதற்கு, முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., -பாஜக, அதிமுக., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்தி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ், கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்துடன் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இரு கட்சிகள் இடையே பலமுறை உரசல்கள் எழுந்தாலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு பக்கபலமாக இருப்பதால், புதுச்சேரியில் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் 3,500 அதிகமானோருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
விஜயின் த.வெ.க வுடன் கைகோர்க்க திட்டம்!
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி நிலையில், கடந்த தேர்தலை போலவே என்.ஆர்.காங்கிரஸ்., கட்சியுடன் கூட்டணி தொடரும் என பா.ஜ., நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. ஆனால், என்.ஆர். காங்., கட்சியின் தலைவரான ரங்கசாமி, பா.ஜ.,வை கழற்றிவிட்டு விஜயின் த.வெ.க வுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ள உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயபாலும் உடனிருந்தார்.
இப்போது இதற்கு அவசரம் இல்லை!
கூட்டத்தில் நடந்தவை தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில்., தொகுதி பங்கீடு தொடர்பாக பேச பாஜகவினர் வந்தனர். வரும் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட விருப்பம் இருப்பதாக முதல்வரிடம் பாஜகவினர் தெரிவித்தனர். இப்போது இதற்கு அவசரம் இல்லை. ஆட்சி நிர்வாகத்தில் தான் சந்திக்கும் பிரச்சினைகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள தொந்தரவுகளையும் வெளிப்படையாக நிர்மல் குமார் சுரானாவிடம் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆளுநர், தலைமைச்செயலர், அதிகாரிகள் ஆகியோரின் தலையீடுகளையும் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழலில் ஆட்சியில் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்து வருவதையும் முழுமையாக தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதில் பிரச்சினை இருக்கிறது. அதன்பிறகு டெல்லியில் இருப்போருடன் பேசலாம். இது தொடர்பாக ஜனவரியில் அடுத்தக்கூட்டம் தொடர்பாக பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு அனுப்பி வைத்தார் என தெரிவித்தனர்.
100 சதவீதம் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடரும்
இதை தொடர்ந்து பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல்தான் பேசினோம். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. விஜய் ரோடு ஷோ அனுமதிப்பது தொடர்பாக அரசு தரப்பில் தான் முடிவு எடுப்பார்கள். பாஜகவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்டிஏ அரசில் பாஜக இருந்தாலும் முதல்வர் தான் முடிவு எடுப்பார். வரும் தேர்தலிலும் 100 சதவீதம் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடரும். அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் என்டிஏ அரசுக்கு ஆதரவு தருகிறார்கள். எந்த பாஜக எம்எல்ஏவும் என்டிஏ அரசுக்கு எதிர்ப்பாக இல்லை. பத்திரிக்கையாளர்கள் தான் சந்தேகப்படுகிறார்கள் என கூறி புறப்பட்டார்.





















