இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் தொகுதி பங்கீடு தொடர்பாக பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது பாஜகவினருக்காக காலை விருந்தும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அதிமுக விரைவுப்படுத்தியுள்ளது. அந்த வகையில் முதல் ஆளாக தேர்தல் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. பாஜக, பாமகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்தாக பாஜகவிற்கு வழங்கப்படும் தொகுதிகளில் இருந்து உள் ஒதுக்கீடு மூலம் டிடிவி தினகரனையும் கூட்டணியில் இணைத்துள்ளது. இதே போல தமாகா, புதியநீதி கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகம் வந்த மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி,கேபி முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். இதனையடுத்து இன்று கூட்டணி தொடர்பாக இறுதி முடிவானது எடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்றுள்ளது. அப்போது காலை விருந்தை எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த விருந்து நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தரன், எல்.முருகன், தமிழிசை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.?
விருந்திற்கு பிறகு அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளது. அந்த வகையில் விஜய்யின் தவெக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இணப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே 40 தொகுதிகளை கேட்டுள்ளது பாஜக, இதில் உள் ஒதுக்கீடு மூலம் டிடிவி தினகரன் கட்சிக்கு 8 முதல் 10 தொகுதிகளும், தமாகவிற்கு 4 தொகுதிகளும், ஐஜேகே, புதிய நீதிக்கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
மீதமுள்ள 20 முதல் 22 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதே போல அதிமுகவானது குறைந்தது 170 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. எனவே பாமகவிற்கு 18 தொகுதிகள், புரட்சி பாரதத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விருந்தோடு தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் புதிய கட்சி
மேலும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இணைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதி முடிவு விரைவில் வரும் என கூறப்படுகிறது.























