"ராஜ் மோகன் சாதியால் அமைச்சர் ஆகவில்லை".. பா.ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு தவெக எம்எல்ஏ ரேவந்த் பதிலடி
அமைச்சர் ராஜ்மோகன் குறித்த இயக்குநர் பா ரஞ்சித்தின் விமர்சனத்திற்கு தவெக மதுரவாயல் எம்.எல்.ஏ ரேவந்த் பதில் அளித்துள்ளார்

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தலித் அமைச்சர்கள் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்திற்கு, தவெக மதுரவாயல் எம்எல்ஏ ரேவந்த் பதிலடி அளித்துள்ளார். "அமைச்சர் ராஜ் மோகன் அவரது சாதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை; அவரது தகுதி, திறன் மற்றும் அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது" என்று ரேவந்த் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தலைமையில் நீட் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறை அடக்குமுறையை கண்டித்தும் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தவெக அரசின் தலித் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார் . குறிப்பாக அமைச்சர் ராஜ்மோகன் குறித்து ரஞ்சித் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித்
அமைச்சர் ராஜ்மோகன் குறித்து பா ரஞ்சித் இப்படி கூறியிருந்தார் "அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் எழும்பூரில் நின்றபோது தான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறாரா? இப்படியான ஒருவர் அமைச்சர் ஆனால் என்ன ஆகலனா என்ன. அவரை நீங்கள் அமைச்சர் ஆக்கிக்கொள்ளுங்கள். நல்ல விஷயம். அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. "
தவெக எம்.எல்.ஏ ரேவந்த் பதில்
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள ரேவந்த், "ஐந்து நீண்ட ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்களைக் கேள்வி கேட்கத் துணியாதவர்கள், 2026 மே 4-க்குப் பிறகு திடீரென தங்கள் குரலை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்தப் பழைய அரசியல் பாணி காலாவதியாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சாதி, மதம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்ய உறுதிபூண்ட அரசாங்கத்தை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அமைச்சர் ராஜ் மோகன் அவரது சாதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. அவரது தகுதி, திறன் மற்றும் அவர் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைச்சராக்கப்பட்டார். இதே கொள்கைதான் எங்கள் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சருக்கும் பொருந்தும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, "சிலர் இன்னும் மக்களை சாதி அடையாளங்களுக்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். நல்லாட்சி, சம வாய்ப்பு மற்றும் திறமையான நிர்வாகமே எங்கள் முன்னுரிமை" என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "நியாயமான கேள்விகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பிரச்சாரங்கள் அல்லது பிரித்தாளும் அரசியல் மூலம் அல்ல; உண்மைகள், செயல்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலமே பதிலளிப்போம். அடையாள அரசியல் சார்ந்த பழைய அரசியல் பாணி இனி எடுபடாது" என்று ரேவந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















