MK STALIN : சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.! மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் - அடித்து சொல்லும் ஸ்டாலின்
DMK MK STALIN : வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஒரு பீனிக்ஸ் பறவை
தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தோல்வி வெற்றி என்பது இரண்டையும் சமமாகக் கருதி பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி, இதோடு திமுக கதை முடிஞ்சுருச்சு அப்படி என்று கவிதை அரங்கேற்றப் பாடுவதற்கு கூட முன் வந்திருக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள். பல வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும்.
சோகப்பட வேண்டிய அவசியல் இல்லை - ஸ்டாலின்
இங்கே கூட பேசியவர்கள் எல்லாம் ஏதோ சோகத்தில் இருப்பது போல நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, எதிரே இருக்கக்கூடியவர்கள் கூட ஏதோ சோகமாக இருப்பதாகக் காட்சித் தருகிறீர்கள். நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோம். நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஐந்து வருஷம் ஆட்சிப் பொறுப்பு தந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளர்களுக்கு, தொழிலாளர் தோழர்களுக்கு, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு, பெண்களுக்கு, மகளிருக்கு, ஆசிரியர்களுக்கு இப்படி எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது.
இன்றைக்கும் திமுக தான் ஆட்சி
நாம் வெற்றி வாய்ப்பை இழந்து புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு நான் வாழ்த்து சொன்னேன், நீங்கள் படிச்சிருப்பீங்க, அந்த அறிக்கையைப் படிச்சிருப்பீங்க. வாழ்த்துச் சொல்லுகிற போது சொன்னேன், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்களுக்கு வாழ்த்துக்கள், ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஒரு கோரிக்கையாக வைத்தேன். ஆக நாம் வைத்திருக்கிற கோரிக்கை, இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்கூடாகப் பார்க்கிறோம். அதையேதான் சொன்னேன், நாமும் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.
திமுகவின் தோல்வி ஆய்வு செய்ய குழு
நான் தேர்தல் நேரத்தில் சொன்னேன், இந்தத் திட்டம் இருக்கிற வரைக்கும், நான் பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. ஆக, திட்டம் நடக்கிற வரைக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அப்படின்னு அவங்க சொன்னாங்க. அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. ஆக, இந்தத் தேர்தலின் தோல்வியைப் பார்த்து நான் சிதறிவிடல, மனம் சோர்ந்துவிடவில்லை. 234 தொகுதிகள்ல இன்றைக்கு என்ன நிலை? எப்படி வெற்றி பெற்றிருக்காங்க? எப்படி வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம்? என்ன காரணம்? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நான் ஒரு குழுவை நியமிச்சிருக்கேன். 86 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, 234 தொகுதிக்கும் இன்றிலிருந்து அந்த குழு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடக்க இருக்கு.
அந்த ஆய்வின்போது நம்மிடத்தில் என்ன குறை? நம்மிடத்தில் என்ன பிரச்சனை? மற்றவங்க என்ன செஞ்சிருக்காங்க? எது விட்டுப்போயிருக்கு? ஏன் இந்தத் தோல்வி நடந்திருக்கு? ஏன் இந்தத் தொகுதியில வெற்றி பெற்றிருக்கோம், இந்தத் தொகுதியில வெற்றி பெறல? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுருக்கு. அந்த குழு மட்டுமல்ல, ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்புல ஒரு வெப்சைட்டையும் ஆரம்பிச்சிருக்கிறோம். ஆக, அந்த வெப்சைட்ல கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களோ, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களோ அதுல தன்னுடைய கருத்துக்களை வெளியிடலாம் என்று அந்த வெப்சைட்டைத் தொடங்கி இருக்கிறோம்.
மீண்டும் திமுக ஆட்சி- ஸ்டாலின்
எனவே, நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் உங்களுக்கு இருக்கு, இயக்கம் இருக்கு, நாங்கள் இருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















