”PWD துறையில் முறைகேடா?” உண்மை என்ன..? கள நிலவரம் இதுதான்!
”பொதுப்பணித்துறையில் ஊழல் நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக நடத்தப்பட்ட கள ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவை”

பொதுப்பணித்துறையில் முறைகேடு புகார்கள் வருவது ஒன்றும் புதிததல்ல. ஆனால், அந்த புகார்கள் எல்லாம் உண்மையா என்று ஆராய்ந்தால், அதில் பல தங்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பதற்காக கிளம்பிவிடப்பட்ட பூதங்களாக இருக்கும். இப்போதும் அப்படியான ஒரு புகார் கச்சைக் கட்டி பறந்து வருகிறது. ஒப்பந்தங்களை பெறுவதற்கு லஞ்சம், சான்றிதழ் பெறுவதில் ஊழல் என்ற அந்த புகார்கள் உண்மையா ? அல்லது புரளியா என்பதை ஆராய களத்தில் இறங்கினோம் .
கள ஆய்வில் தெரிய வந்த தகவல்
பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, அதற்கான சான்றினை அரசு அதிகாரிகள் கொடுத்த பிறகு, அதனை டெண்டருடன் சேர்த்து சமர்பித்தால் மட்டுமே, டெண்டர் போடப்படும் என்ற நிபந்தனையை பொதுப்பணித்துறை உருவாக்கியுள்ளது. டெண்டரில் பங்கேற்கவிரும்பும் ஒப்பந்தத்தாரர்கள் பணி நடைபெறும் இடத்தை வந்து பார்வையிட வேண்டும். அதற்கு பொதுப்பணி அதிகாரிகள் ஒரு சான்று தருவார்கள். அந்த சான்றை ஆன்லைன் டெண்டரில் அப்லோட் செய்ய வேண்டும் இதுதான் நிபந்தனை. ஒப்பந்தத்தார்கள் பணி நடைபெறவிருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டாலும் அதற்கான சான்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தருவதில்லை என்பதுதான் இப்போதைய குற்றச்சாடு
டெண்டர் கிடைக்காத விரக்தியில் புரளி
ஆனால், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுபடி இந்த SVC சான்றிதழை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டாயம் குறித்த தேதிக்குள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதனால், ஒப்பந்ததாரர்கள் களத்திற்கு சென்றவுடன் அவை பதிவு செய்யப்பட்டு சான்றிதழும் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. ஆனால், களத்திற்கே செல்லாமல் சில ஒப்பந்தத்தாரர்கள் தங்களுக்கு சான்றிதழ் வேண்டும் என்று கேட்பதாலும் ஆன்லைன் டெண்டர்களுக்கு இந்த சான்று கட்டாயம் என்பதால் அவர்களே வேறு வழிகளில் இந்த சான்றை பெற முயற்சிப்பதாகவும் அதற்கு இடம் தராத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது போலியான புகார்களை பரப்புவதகவும் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திமுக அரசின் வெளிப்படைத்தன்மை
திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் நடைபெறும் அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதால், வெளிப்படைத்தன்மை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தெந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுவெளியிலேயே இருக்கின்றன. அப்படி இருக்கையில், இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், கடந்த கால ஆட்சியில் வேறு வழியில் டெண்டர் பெற்றவர்களின் சதிச் செயலே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அலுவலகமே அளித்த பதில்
இது குறித்து PWD ஒப்பந்தத்தாரர்கள் முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த மனுவை ஆய்வு செய்து விசாரித்த முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகர்கள் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்றும் ஒரு சிலரின் சுய லாபத்திற்காக இந்த புகார்கள் வந்துள்ளதாலும் அந்த புகார் மனுவை நிராகரித்துள்ளதுடன். கள ஆய்வு சான்று என்பது அரசின் கொள்கை முடிவு என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
பொதுப்பணித்துறை விளக்கம் என்ன?
இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் திரு.ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவையடுத்து கடந்த 14 – 03 – 2025ஆம் தேதி அன்று, பொதுப்பணித்துறையின் அனைத்து தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒவ்வொரு துறையும் தங்கள் டெண்டர் அறிவிப்புகளில், வேலைத்தள ஆய்வு சான்றிதழ் (Work Visit Certificate) பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மற்றும் அந்த சான்றிதழைப் பெற வேண்டிய கடைசி தேதியையும் தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் இதன் மூலம், டெண்டர்களுக்காக அந்த சான்றிதழைப் போதிய நேரத்தில் பெற இந்த முறை அனுகூலமாக இருக்கும் என்றும் மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை தவிர்க்க நேரிடும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு வரிகளை குறிப்பிட்டு, மேற்கண்ட நீதிமன்ற உத்தரவை தலைமைப் பொறியாளர்கள் அனைவரும் பின்பற்றுமாறும், அதற்கேற்றவாரு தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவை வழங்கவேண்டும் என்றும் பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன் அறிவுறுத்தியுள்ளார்.
PWD ஒப்பந்தத்தாரர்கள் சங்கமே புகாருக்கு மறுப்பு
இந்த விவகாரம் குறித்து PWD ஒப்பந்தத்தாரர்கள் தரப்பே மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தினரிடம் பேசும்போது, தங்கள் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லையென்ற அதிருப்தியில் இதுபோன்று செயல்பட்டுவிட்டதாகவும், அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

