கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடை தூய்மைப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக மயிலாடுதுறை மாப்படுகை கிராம சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிரானதாக கூறப்படும் சாதிய பாகுபாட்டு சம்பவத்தை கண்டித்து, மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அரசியல் ரீதியான கண்டன தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தவானி பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, அவர் உரையாற்றிய மேடையை ‘ஸ்ரீராம் சேனா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனித நீர் தெளித்து சுத்திகரிப்பு செய்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
தலித் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அமர்ந்த மேடையை இவ்வாறு தூய்மைப்படுத்திய செயல், தமக்கு கடுமையான மனவேதனையையும் தீண்டாமை கொடுமைக்கு ஆளான உணர்வையும் ஏற்படுத்தியதாக கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி இந்திய மக்களவையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றில் இருக்கும் ஒரு தலைவருக்கே இந்த நிலைமையா என நாடாளுமன்றத்திலும், தேசிய அளவிலும் இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.
கிராம சபையில் வெடித்த எதிர்ப்பு
நாடு முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நேற்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிரானதாக கூறப்படும் சாதிய பாகுபாட்டு இந்த தீண்டாமை தீய செயலுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திய எம்.எல்.ஏ, மாப்படுகை கிராம சபை கூட்டத்திலேயே இதற்கு எதிராக அதிகாரப்பூர்வ கண்டன தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என முன்மொழிந்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சட்டமன்ற உறுப்பினரின் இந்த திடீர் நகர்வால் கிராம சபை கூட்டத்தில் சற்றே சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது கோரிக்கையை ஏற்று, "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் தீண்டாமை இழிவுபடுத்தல் சம்பவத்திற்கு இந்த கிராம சபை கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது" என்ற வடிவில் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அரசியல் ரீதியான பரபரப்பு
பொதுவாக கிராம சபை கூட்டங்களில் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, ஊரக வளர்ச்சித் திட்டங்கள், உள்ளூர் நிர்வாகப் பணிகள் மற்றும் கிராமத்தின் உள்கட்டமைப்பு சார்ந்த கோரிக்கைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவது வழக்கம்.
ஆனால், நாட்டின் சுதந்திர தின நாளில் நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வ கிராம சபை கூட்டத்தில், தேசிய அளவிலான அரசியல் மற்றும் சமூகச் சிக்கல் சார்ந்த கண்டன தீர்மானத்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முன்மொழிந்து நிறைவேற்றியது அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாநில மற்றும் தேசிய அரசியலில் எதிரொலிக்கும் ஒரு விவகாரம், அமைதியான கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக வடிவெடுத்திருப்பது, மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























