Vaiko vs Mallai Sathya: மதிமுகவில் அடித்த புயல்! மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோவின் அதிரடி உத்தரவு!
ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுகவின் ஒற்றுமைக்கும், நன்மதிப்புக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்தி நிரந்தரமாக நீக்கி வைகோ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்லார்
மல்லை சத்யா துரை வைகோ மோதல்:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தில் இருந்தே மதிமுகவில் குழப்பங்கள் வெடிக்க தொடங்கியது. வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய வைகோவே தனது மகனை முதன்மை செயலாளராக்கி வாரிசு அரசியல் செய்கிறார் என வைகோ மீது சொந்த கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டினர். அதிலும் துரை வைகோ சீனியர்களை ஓரங்கட்டுவதாக மோதல் வர ஆரம்பித்தது. கட்சியின் சீனியரும் மதிமுக துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது.
மல்லை சத்யாவை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பது வரை சென்ற இந்த மோதலில், வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படையாக மல்லை சத்யா தெரிவித்தார். இதனால் கடுகடுத்த வைகோ விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல் தன்னுடன் நீண்ட நாட்களாக தன்னுடன் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
விளக்கம் கேட்டு சஸ்பெண்ட்:
இந்தநிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி வைகோவைக் கண்டித்து சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் மல்லை சத்யா. அதில் பேசிய அவர், கூவம் நதியின் நிலைக்கு ம.தி.மு.க சென்றுகொண்டிருக்கிறது. மகனுக்கு பதவிகளை கொடுத்து தந்தையாக நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசியலில் தோற்றுவிட்டீர்கள். எங்களுடைய வயிற்றெரிச்சல் உங்களுடைய அரசியல் சதுரங்கத்தை தூள் தூளாக்கும் என கொந்தளித்தார்.
இந்த போராட்டத்தால் கோபமான வைகோ, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். மேலும் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுக்குமாறு காலக்கெடு விதித்தார்.
மல்லை சத்யா நீக்கம்:
இந்த நிலையில் மல்லை சத்யாவிடம் இருந்து விளக்கம் பெறப்பட்ட நிலையில் அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார். அதில் "கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராகவும் செயல்பட்டார்" என்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக, ம.தி.மு.க சட்ட திட்டங்களின்படி, துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்துள்ளார்.
”எதிர்பார்த்த ஒன்று”-மல்லை சத்யா
இந்த அறிவிப்பு தனது அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இதுதான் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என மல்லை சத்யா கூறியுள்ளார். ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.






















