தமிழகத்தில் 2000 ரூபாய்க்காக யூடியூபர்ஸ் செய்யும் கேவலம் - குஷ்பு ஆவேசம்
ஹேமா கமிட்டி போல் தமிழகத்தில் நடிகர்கள் சங்கம் சார்பில் ரோகிணி மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய யூடியூபர்ஸ் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள் எனவும் கூறினார்.

கோவை ஈச்சனாரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி மாவட்ட மாநாட்டிற்கு நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, எல்லா மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போது அரசியல் விவாதம் ஆக்காதீர்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பிரச்சனைகளை அரசியலாக்க கூடாது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருகிறதா? நான் வேறு கட்சியில் இருப்பதாக நினைக்காமல் பெண்களை அழைத்து இதற்கான தீர்வை ஏற்படுத்த குழு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முதல்வர் எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்து பெண்களை அழைத்து இந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஹேமா கமிட்டி போல் தமிழகத்தில் நடிகர்கள் சங்கம் சார்பில் ரோகிணி மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய யூடியூபர்ஸ் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் யூடியூபர்ஸ் பிரச்சனை இல்லை. தமிழகத்தில் 2000 ரூபாய்காக யூடியூபர்ஸ் பெண்கள் பற்றி அவதூறாக பேசும் பிரச்னைகள் உள்ளது. தங்கள் வீட்டில் பெண்கள் இருப்பதை மறந்து கணவன் மனைவி இடையே நடப்பதை பெண்கள் பற்றி அவதூறாக பேசுகின்றனர். தமிழகத்தில் யூடியூபர்ஸ் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மேல் புகார்கள் வரும்போது குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பது கஷ்டமாக உள்ளது. தற்போது புகார்கள் அதிகம் வருவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் வெளியே வருகிறது. போக்சோ பிரச்னைகள் 90% குடும்பத்தில் நெருக்கமானவர்கள், அறிந்தவர்களால் தான் ஏற்படுகிறது. இதை பற்றி பேச வேண்டும், புகார்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, மிகப்பெரிய நடிகர். அவருக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு உள்ளது. தற்போது விஜய் அரசியலில் இருப்பதால் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

