மது, போதை இல்லாத தொகுதி உருவாகும்... த.வெ.க. MLA விக்னேஷின் மாஸ் அறிவிப்பு...
கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது இலக்கு என த.வெ.க.MLA விக்னேஷ் பேச்சு.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் பொதுமக்களை திரட்டி காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் முன்மாதிரி தொகுதி
அ.தி.மு.க.வின் பலமான கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தார். இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய விக்னேஷ், தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே தனது இலக்கு என கூறினார். சட்டமன்ற உறுப்பினருக்காக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தமாட்டேன் என்றும் உறுதியளித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவம் கொண்டது போல, கிணத்துக்கடவு தொகுதியையும் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைந்த பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதே தனது முக்கிய நோக்கம் என கூறிய அவர், தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களுடன் சேர்ந்து காவல் நிலையங்களை முற்றுகையிடுவேன் என எச்சரித்தார்.
மேலும், நீண்ட காலமாக நிலவி வரும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என விக்னேஷ் தெரிவித்தார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















