CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
CV Shanmugam Next Plan : அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், அரசியலில் இருந்து சி.வி.சண்முகம் ஒதுங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு போன் கால் அனைத்து முடிவுகளையும் மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்வி- அதிமுக போட்ட பிளான்
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்கும் எதிர்கட்சியாக இருந்த அதிமுகவிற்கும் இடையே தான் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாரா திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அதே நேரம் கடந்த 5 ஆண்டுகள் எதிர்கட்சியாக அதிமுக இருந்துள்ளது. இனியும் தொடர்ந்து எதிர்கட்சியாக இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. எனவே ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற வேண்டும் என அதிமுகவில் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் திட்டமிட்டனர்.
இபிஎஸ்க்கு எதிராக திரண்ட எம்எல்ஏக்கள்
இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்களை கொண்ட அணியினர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த 28 மாவட்ட செயலாளர்களை ஒரே நாளில் நீக்கி அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அந்த இடத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்களையும் அறிவித்தார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அதே நேரம் தவெகவிற்கு வாக்களித்த 25 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியை பறிக்கவும் இபிஎஸ் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.
இபிஎஸ்யை சந்தித்த எஸ்பி வேலுமணி
இந்த நிலையில் அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என காத்திருந்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடமில்லையென முதலமைச்சர் விஜய் பின்வாங்கிவிட்டார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் எஸ்.பி.வேலுமணி அணியினர் தவித்தனர். இதனையடுத்து இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். நிலைமை மோசமாகவை உணர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும் இபிஎஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 19 எம்எல்ஏக்கள் இபிஎஸ்யை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.
சிவிஎஸ், விஜயபாஸ்கர் முடிவு என்ன.?
ஆனால் இதில் சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் இபிஎஸ்யை சந்திக்காமல் மவுனம் காத்தனர். இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஏற்றார் போல விஜயபாஸ்கரும் விராலிமலை தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதே நேரம் சி.வி.சண்முகம் அரசியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்பட்டது இதற்கு இடையே மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சி.வி.சண்முகம், 5 வருடம் முழுமையாக எம்எல்ஏவாக தொடருவேன் என உறுதியாக தெரிவித்தார்.
சி.வி.சண்முகத்திற்கு அன்புமணியின் அழைப்பு
இந்த நிலையில் சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என கேள்வி எழுந்த நிலையில், பல்வேறு தரப்பில் சி.வி.சண்முகம் கருத்து கேட்ட நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இதே போல பாமக தலைவர் அன்புமணி சி.வி.சண்முகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அதிமுகவில் முக்கிய தலைவராகவும், வடமாவட்டங்களில் செல்லவாக்கு மிக்கவராகவும் வளர்ந்துள்ளீர்கள்.
எனவே அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவையோ, ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் கட்சி அலுவலகத்திற்கு கூட செல்ல வேண்டாம் அமைதியாக இருங்கள் என அன்புமணி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சற்று அமைதி நிலைக்கு சி.வி.சண்முகம் திரும்பிய நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை எடுப்பார் என சி.வி.சண்முக வட்டாரத்தின் தகவலாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















