Rajya Sabha Election Date: மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல்.! திமுக, அதிமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு.?
Rajya Sabha Election Date: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தலை அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ , கனிமொழி சோமு ஆகியோரும் அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் அதிமுக கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்
ஏப்ரல் 1ஆம் தேதி முடியும் பதவிக்காலம்
இந்த 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. எனவே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்று தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 37 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
- வேட்பு மனுவானது பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்
- வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 5ஆம் தேதி
- வேட்பு மனு பரிசீலனை மார்ச் 6ஆம் தேதி
- வேட்பு மனுவை திரும்ப பெறும் நாள்- மார்ச் 9ஆம் தேதி
- வாக்குப்பதிவு- மார்ச் 16ஆம் தேதி
- வாக்கு எண்ணிக்கை- மார்ச் 16ஆம் தேதி
யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக 4 இடங்களும், அதிமுக சார்பாக 2 இடங்களிலும் போட்டியிட முடியும். அந்த வகையில் திமுக சார்பாக திருச்சி சிவா மற்றும் என்.ஆர்.இளங்கோவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சியை சமாதானம் செய்யும் வகையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைக்கும் ஒரு இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதேபோல அதிமுகவில் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தலாம். ஏற்கனவே தேமுதிகவிற்கு ஒரு இடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேமுதிக கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வராதபட்சத்தில் இரண்டு இடங்களில் அதிமுகவே போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் தம்பிதுரைக்கு மீண்டும் வாயப்பு வழங்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















