MDMK: மதிமுகவில் மையம்கொண்ட சர்ச்சை? வைகோவின் சேனாபதி நான்- மல்லை சத்யா
துரை வைகோவின் இந்த அறிவிப்புக்கு, மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவே காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறேன் என துரை வைகோ நேற்று அறிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனினும் துரை வைகோவின் முடிவை கட்சித் தலைமை ஏற்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
துரை வைகோவின் இந்த அறிவிப்புக்கு, மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவே காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் வைகோவின் சேனாபதி நான் என்று மல்லை சத்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. அதில் அவர் கூறி உள்ளதாவது:
புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்,
இன்று 20 04 25 ஞாயிற்றுக்கிழமை இறைமகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்.
ஐந்து இளைஞர்கள் என்னைப் பின் தொடர்ந்தனர்
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் 900 மக்கள் தொகை கொண்ட உலகத்தின் சின்னஞ்சிறு நாடு வாடிகன் சென்று அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் நட்சத்திர பயிற்சியாளர் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூவின் அழைப்பில் தற்காப்புக் கலை பயிற்சியளிக்க பிரான்ஸ் நாடு சென்று இருந்தபோது வாடிகன் சென்று புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்கச் சென்றேன்.
அங்கு ஒரு அனுபவம். புனித பேதுரு பேராலயம் உள்ளே நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு சென்றபோது ஐந்து இளைஞர்கள் என்னைப் பின் தொடர்வதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்க வேண்டும், என்னை கண்கணிக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டேன். புனித பேதுரு நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சற்று முன் நான் நின்று அவர்களை எதிர் கொண்டேன் யார் நீங்கள் ஏன் என்னை பின்தொடர்கின்றீர்கள் என்று கேட்டபோது நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றீர்கள் என்று கேட்டார்கள். நான் இந்திய, தமிழ்நாடு என்றேன். எதற்காக வந்து இருக்கிறீர்கள் என்றனர். சுற்றுலா என்றேன். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டார்கள். ஏன் இவையெல்லாம் கேட்கிறீர்கள் என்றபோது, எனது மோதிர விரலில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் முகம் பதித்த மோதிரத்தைச் சுட்டிக் காட்டி இது எதன் அடையாளம் என்று கேட்டார்கள்.
என்னுடைய தலைவர் வைகோ
நான் சிரித்துக் கொண்டே நான் ஒரு அரசியல்வாதி. இது என்னுடைய தலைவர் என்றபோது அவர்கள் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அது சரி இதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் என்றபோது அவர்கள் சொன்னார்கள். நாங்கள் மதங்களை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மாணவர்கள் ஐரோப்பாவில் ஆண்கள் இதைப் போன்று பெரிய கல் பதித்த மோதிரம் அணிவது இல்லை.
இதைப் போன்ற மீன் சின்னம் பதித்த பெரிய மோதிரத்தை போப்பாண்டவர் அணிந்து இருப்பார். அது புனித பேதுரு மூலமாக வந்தது. அவரைச் சந்திக்க வருகின்ற குருமார்கள் தாழ் பணிந்து வணங்கி அந்த மோதிரத்தில் முத்தம் பதிப்பார்கள் என்று விளக்கம் சொன்னார்கள். அதைப் போன்று உங்கள் கையில் இருக்கும் மோதிரம் ஏதாவது மதம் சார்ந்ததாக இருக்குமோ என்ற ஆவலில்தான் உங்களைப் பின்தொடர்ந்தோம் என்று சொல்லி விட்டு விடைபெற்றார்கள்.
வைகோவின் சேனாதிபதி நான்
இனியத் தோழமைகளே இலங்கை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டு, தான் இராமனின் தூதுவன் என்பதற்கு சாட்சியாக ராமன் சீதை திருமணத்தின்போது அணிவித்த மோதிரத்தை காட்டி தன் நிலையை உறுதிப் படுத்துவான், சொல்லின் செல்வன் அனுமன்.
அதைப் போன்றே நான் திராவிட இயக்கப் போர்வாள், புரட்சிப் புயல் தலைவர் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம், என் மோதிர விரலில் தலைவர் வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம்.’’
இவ்வாறு மல்லை சத்யா பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை, எழும்பூரில் நடைபெற்றது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் துரை வைகோ முதன்மைச் செயலாளராகத் தொடர வேண்டும், அவரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

