Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!
மாமல்லபுரத்தில் ராமதாசால் கட்சியை நிர்வகிக்க முடியவில்லை என்று அன்புமணி பேசிய நிலையில், தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக்கூடாது என்று ராமதாஸ் காட்டமாக அவருக்கு பதிலடி தந்துள்ளார்.

Anbumani VS Ramadoss: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாகவும், குறிப்பாக வட தமிழ்நாட்டில் முக்கியமான கட்சியாகவும் திகழ்வது பாமக. மறைந்த முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு நிகரான செல்வாக்குடன் இருப்பவர் ராமதாஸ்.
சேர் போட்ட அன்புமணி:
அவர் உருவாக்கிய பாமக இன்று குடும்ப சண்டையால் பிளவுபட்டு வருகிறது. கட்சியை முழுமையாக கைப்பற்ற அவரது மகன் அன்புமணியும், தான் இருக்கும் வரை தான் எடுப்பதே முடிவு என்பதில் திடகாத்திரமாக ராமதாசும் மாறி, மாறி மல்லுகட்டி வருகின்றனர். தாயை அடித்தார், பணத்தை கொடுத்து கட்சிக்காரர்களை இழுக்கிறார் என்று பாமக-வினரை அதிர வைக்கும் அளவிற்கு அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்காக பல புகார்களைத் தெரிவித்து வருகிறார்.

கட்சியின் முடிவுகளை யார் எடுப்பது? கூட்டணியை யார் முடிவு செய்வது? என்ற அதிகார மோதலே இதன் ஆணிவேராக உள்ளது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழுவில் ராமதாஸிற்கு தனியாக இருக்கை போடப்பட்டு இருந்தது.
மாமல்லபுரத்தில் ராமதாசை புகழ்ந்து பேசிய அன்புமணி ராமதாசால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இன்று உள்ளது என்றும், பதவிக்காக நான் வரவில்லை என்றும் பேசினார்.
போட்டோ கூட வைக்காத ராமதாஸ்:
இந்த நிலையில், பூம்புகாரில் ராமதாஸ் நடத்திய வன்னியர் மகளிர் மாநாட்டில் ராமதாஸ் - அவரது மனைவியார், மறைந்த குரு ஆகியோரது உருவ படங்கள் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அன்புமணியின் புகைப்படம் வைக்கப்படவில்லை.

மேலும், அந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன், நான் சொல்வதுதான் நடக்கும், யார் சொல்வதையும் கேட்காதீர்கள், தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று அன்புமணியை காரசாரமாக விமர்சித்து பேசினார்.
அடிமட்ட தொண்டர்கள் வேதனை:
பாமக-வினருக்கு என கணிசமான வாக்கு சதவீதம் இருக்கும் சூழலில், ராமதாஸ் - அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக பிளவுபட்டு நிற்பது பாமக அடிமட்ட தொண்டர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்களது சண்டையால் யாருக்கு ஆதரவாக செயல்படுவது? என நிர்வாகிகள் இடையே ஆங்காங்கே மோதல் வெடித்து வருகிறது.
என்னதான் நடக்கப்போகிறது?
கட்சியின் மூத்த தலைவர்கள் எடுக்கும் சமாதான முயற்சிகளும் தோல்வியில் முடிந்து வரும் நிலையில், குடும்பத்தினர் இவர்களை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் தொடர் தோல்வியில் முடிந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஒருங்கிணைந்த பாமக-வாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வார்களா? அல்லது பிளவுபட்ட பாமக-வாக தேர்தலை எதிர்கொள்வார்களா? என்ற கேள்வியும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.





















