எடப்பாடியோடு கூட்டணியா.!! திமுகவிற்கு பல்டி அடித்த அமமுக முக்கிய நிர்வாகி- சாட்டையை சுழற்றிய டிடிவி
சட்ட மன்ற தேர்தலையொட்டி அதிமுக- அமமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நெருங்கும் தேர்தல்- அதிமுக கூட்டணி வியூகம்
தமிழக சட்டப்பேரவை தேர்துலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் முதல் கட்டமாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுகவும் தனது தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிந்து செல்லக்கூடாது என்பதற்காக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதில் பாஜக தங்களது அணியில் இணைந்த அதிமுக, அடுத்ததாக பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை இணைத்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
அந்த வகையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் என தனி அணியானது உருவானது. அப்போது அதிமுகவை எதிர்க்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற்றது. இதனால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது.
ஆட்சியை கைப்பற்ற திட்டமிடும் அதிமுக
இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்ட அதிமுக, பாஜகவுடன் இணைந்து அமமுகவை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை'என டிடிவி தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன், இந்த முடிவை அமமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.
திமுகவில் அமமுக நிர்வாகி
இந்த நிலையில் தான் அமமுக துணை பொதுச்செயலாளரான S.V.S.P.மாணிக்கராஜா திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஏற்றார் போல இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்ற மாணிக்க ராஜா திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அமமுக தொடங்கப்பட்ட நோக்கமே நிறைவேறவில்லை என்ற காரணத்தால் அமமுகவில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















