EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
EPS ADMK: அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்ட நிலையில், இரண்டு பிரிவாக பிரிந்து அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டனர். இந்த நிலையில், சமாதானப்பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மீண்டும் ஒரே அணியாக இணைந்தனர்.

தேர்தல் தோல்வி- அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை பிடித்த நிலையில், 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. இதனால் தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என எஸ்.பி.வேலுமணி. சி.வி.சண்முகம் தலைமையிலான அணி திட்டம் போட்டது. இதற்காக சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் உத்தரவிற்கு எதிராக 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, தனி அணியாக செயல்பட்டு வந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் 30 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
இபிஎஸ்- எஸ்பிவி டீம் மோதல்
அதே நேரம் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதில் இருந்து முதலமைச்சர் விஜய் பின் வாங்கினார். விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை அமைச்சரவையில் இணைத்து எஸ்.பி.வேலுமணி அணிக்கு விஜய் ஷாக் கொடுத்தார். இதனால் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்தை நம்பி வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் கட்சி பதவியும் இல்லை, அமைச்சரவையிலும் இடம் கிடைக்காத காரணத்தால் நட்டாற்றில் தவித்தனர்.
தவெகவிற்கு பல்டி அடித்த எம்எல்ஏக்கள்
ஆதரவாக வாக்களித்த பிறகும் எஸ்பி வேலுமணி தரப்பிற்கு த.வெ.க அமைச்சரவையில் இடம் வழங்கப்படாத காரணத்தாலும், அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் வேலுமணி தரப்பில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இபிஎஸ் பக்கம் செல்லத் தொடங்கினர். அதேநேரம் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்த எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். 25 எம்எல்ஏக்களாக இருந்த எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 15ஆக குறைந்த நிலையில் இ.பி.எஸ்.சுடன் வேலுமணி தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணியானது நடைபெற்றது.
கைவிட்ட விஜய்- இபிஎஸ் பேச்சுவார்த்தை
அதிமுக மூத்த நிர்வாகி தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அடுத்தாக எஸ்.பி வேலுமணி உட்பட 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் பிரபாகரனை சந்தித்து கொறடா உத்தரவை மீறி தவெ. க அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவளித்தது தவறு என்றும் மன்னிப்பு கோரியும் கடிதம் அளிந்தனர்.
இபிஎஸ்- எஸ்பி வேலுமணி டீம் சந்திப்பு
முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியை சந்தித்து அவரிடமும் கடிதம் அளித்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ஏற்கனவே வகித்து வந்த பதவிகளை மீண்டும் வழங்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் நீயா.? நானா என்ற போட்டியில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















