ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
ADMK general committee meeting: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணிக்கு தலைமை, பாஜகவுடன் கூட்டணி, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பு உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்
- பொது எதிரியை வீழ்ந்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜகவுடன்- வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு. 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது!
- வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது!
- கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி K. பழனிசாமிக்கு இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது !
- கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது!
- கோவைக்கும், மதுரைக்கும் பெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்!
- சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்
- ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு!
- ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.T.R.) கழகம் வரவேற்கிறது! முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்!
- விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும். நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது!
- தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள் இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்தும், தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம்!
- படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு தமிழக மக்களைத் தொடர்ந்து கடனாளிகளாக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்!
- கொள்ளைகள்,பாலியல் சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள். வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
- 2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, நீட் தேர்வு ரத்து கல்விக் கடன் ரத்து, பழைய ஒய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ.100 வழங்குதல் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்" என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக மாடல் அரசுக்கு கண்டனம்!
- நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்: அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது! நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் எடப்பாடி K பழனிசாமியை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்! என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.





















