வெறும் 18 பேர்தான்! சட்டசபைக்கு லீவு போடாமல் போன எம்.எல்.ஏ.க்கள் - யார்? யார்?
234 உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சட்டமன்றத்திற்கு விடுமுறையே எடுக்காமல் வெறும் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
லீவு போடாமல் வந்த எம்.எல்.ஏ.க்கள்:
கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தமாக 161 நாட்கள் நடைபெற்றுள்ளது. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி மக்களின் பிரச்சினைகளை விவாதித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் ஒரு மன்றம்.
மொத்தம் 234 உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாட்டில், கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 161 நாட்கள் மட்டுமே நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் வந்த உறுப்பினர்களின் ( எம்எல்ஏ) பட்டியல் வெளியாகியுள்ளது.
யார்? யார்?
1. வி. அமலு - குடியாத்தம் ( திமுக)
2. அரவிந்த் ரமேஷ் - சோழிங்கநல்லூர் ( திமுக)
3. வி ஜி கஜேந்திரன் - திருவள்ளூர் ( திமுக)
4. ஆர். இளங்கோ - அரவக்குறிச்சி ( திமுக)
5. ஈ.ஆர்.ஈஸ்வரன் - திருச்செங்கோடு ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)
6. உதயசூரியன் - சங்கராபுரம் ( திமுக)
7. ஜெ.ஜெ. எபினேசர் - ஆர்கே நகர் ( திமுக)
8. இ. கருணாநிதி - பல்லாவரம் (திமுக)
9. எஸ்.சுதர்சனன் - மாதவரம் ( திமுக)
10. கே.சுந்தர் - உத்திரமேரூர் ( திமுக)
11.வி.சி.சந்திரகுமார் - ஈரோடு கிழக்கு ( திமுக)
12. பிரபாகர்ராஜா - விருகம்பாக்கம் ( திமுக)
13. ஜெ.ஜெ.பிரின்ஸ் - குளச்சல் ( காங்கிரஸ்)
14.ஜிவி மார்க்கண்டேயன் - விளாத்திக்குளம் ( திமுக)
15. முகமது ஷாநவாஸ் - நாகப்பட்டினம் ( விசிக)
16. வி.முத்துராஜா - புதுக்கோட்டை ( திமுக)
17. பி.ராமலிங்கம் - நாமக்கல் ( திமுக)
18. ஜோசப் சாமுவேல் - அம்பத்தூர் ( திமுக)
எதிர்க்கட்சி எப்படி?
தமிழ்நாட்டில் மொத்தம் 234 எம்எல்ஏ-க்கள் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அவர்களில் 18 பேர் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்ற 161 நாட்களும் தவறாமல் பங்கேற்றுள்ளனர். மற்றவர்கள் உடல்நலக்குறைவு, அரசு விழாக்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் சட்டசபைக்குச் செல்லவில்லை.
சட்டசபைக் கூட்டத் தொடரில் 100 சதவீதம் வருகைப்பதிவு வைத்துள்ள 18 எம்எல்ஏ -க்களில் 15 பேர் திமுக-வைச் சேர்ந்தவர்கள். ஒருவர் விசிக-வையும், ஒருவர் காங்கிரசையும், ஒருவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியையும் சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருவர்கூட 100 சதவீத வருகையை பதிவு செய்யவில்லை.
கேள்வி பதில் நேரம்:
சட்டமன்ற கூட்டத்தொடர் என்பது பொதுவாக காலையில் 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும். அதாவது, காலையில் கேள்வி - பதில் நேரத்துடன் தொடங்கும். கேள்வி பதிலுக்காக சட்டமன்றம் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலையில் 1 மணி நேரம் ஒதுக்கப்படும்.
இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதிகளுக்கான தேவைகள், கோரிக்கைகளை கேள்விகளாக எழுப்பி, அந்த துறைக்கான அமைச்சரிடம் பதில் பெறுவார்கள். அந்த கேள்விகளும் முன்கூட்டியே அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, அதற்கு உரிய தரவுகளுடன் அமைச்சர்களும் அந்த கேள்விகளுக்கு தயாராகி சட்டமன்றத்திற்கு வருவார்கள்.
மக்கள் அதிருப்தி:
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதி கோரிக்கைள எழுப்பும் வகையில் நேரம் ஒதுக்கி வழங்கப்படும். இதனால், இந்த கேள்வி பதில் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் பயன்படுத்த ஒவ்வொரு உறுப்பினரும் ஆர்வம் காட்டுவார்கள்.
இதுபோன்று முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 100 சதவீதம் வருகையை உறுப்பினர்கள் முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது.
கேள்வி பதில் நேரம் முடிந்த பிறகு முதலமைச்சர் சில சமயங்களில் 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார். சில சமயங்களில் சிறப்பு விவாதத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படும். அதன்பின்பு, மானியக்கோரிக்கைகள் மீதான வாதம் நடைபெறும்.























