செய்யாத தவறை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டல்; என்ஐஏ அதிகாரிகள் மீது இஸ்லாமியர்கள் புகார்
செய்யாத தவறை ஒப்புக் கொள்ள சொல்லி என்ஐஏ அதிகாரிகள் மிரட்டுவதாக கூறி மயிலாடுதுறை ஆட்சியரிடம் முஸ்லீம்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தொடர்புடையதாக கூறி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்ததற்காக பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், கேட்காத மற்றும் பார்க்காத சம்பவங்களை ஒப்புக் கொள்ள சொல்லி தங்களை மிரட்டுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற என்ஐஏ சோதனை
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஜனவரி 28-ம் தேதி காலை சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்15 குழுக்கள் சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் ஜனவரி 28-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்தனர்.

திருமுல்லைவாசல் - அல் பாஷித்
இந்த சூழலில் திருமுல்லைவாசலை சேர்ந்த அல்பாஷித் என்பவரது வீட்டில் கடந்த 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமுல்லைவாசலில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு மணி நேர விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் இருந்து இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள், சிடிகள், பென்டிரைவுகள் மற்றும் இவரது அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்குத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சென்னையில் விசாரணை நடைபெற்று வந்தது.

அல்பாஷித் கைது
இந்நிலையில் அல்பாஷித் திருமுல்லைவாசலை விட்டு சென்னையில் குடியேறிய புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்றியம் டிரைவராக பணிபுரிந்து கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அவரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஜனவரி 28-ம் தேதி காலை கைது செய்தனர். அதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டு இன்று வரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கில் சிக்க வைக்க முயலும் என்ஐஏ அதிகாரிகள்
இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட இஸ்லாமிய ஜமாத் தார்கள் மற்றும் திருமுல்லைவாசல் கிராம மக்கள் இன்று ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் இதுவரை 27 நபர்களுக்கு சம்மன் கொடுத்துள்ளதாகவும் இதில் சிலர் சிறுவர்களாகவும், கல்லூரி மாணவர்களாகவும் உள்ளனர். இந்த மாதம் மார்ச் 15, 16, 17 ஆகிய மூன்று தினங்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான சிலரிடம் அவர்களுக்கு தொடர்பில்லாத சம்பவங்களை கேட்டதாகவும், பார்த்ததாகவும் ஒப்புக் கொள்ளச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு வர முடியாத நபர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வற்புறுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் செயல்படுவதால் சகோதரர்களாக வாழ்ந்து வரும் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தையும் பிரிவினையும் உருவாக்க முயல்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே மேற்படி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அதே நேரம் தவறு செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.






















