மயிலாடுதுறையில் பரபரப்பு: வாலிபரைத் தாக்கி ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை முயற்சி?
மயிலாடுதுறை அருகே வாலிபர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் ஜாதி ரீதியாகத் தாக்கி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்றதாகக் கூறி வீடியோ வெளியான நிலையில், போலீசார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வாலிபர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கி, ஆடைகளைக் களைந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்றதாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இச்சம்பவத்தில் பாலியல் தொந்தரவு எதுவும் நடக்கவில்லை என்றும், ஜாதி ரீதியான மோதல் மற்றும் வாக்குவாதமே காரணம் என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
நடுரோட்டில் நடந்த கொடூரம்: ஜாதி கேட்டுத் தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்தவர் ஒருவர் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி நல்லாடை பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் (ATM) மையம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல், அவரை சூழ்ந்துகொண்டுள்ளது.
"ஏன்டா இங்க நிக்கிற? உனக்கு எந்த ஊர்? நீ என்ன ஜாதி?" என்று கேட்டு அந்த கும்பல் பாரதிராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி பாரதிராஜாவை மிரட்டியதோடு, அவரைத் சரமாரியாகக் கையால் அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவரது சட்டையைக் கிழித்து, மிக ஆபாசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளனர்.
கொலை மிரட்டலும் தப்பி ஓட்டமும்
தாக்குதலுக்குள்ளான அந்த இளைஞர் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரள்வதற்குள், அந்த கும்பல் அவரை மேலும் மிரட்டியுள்ளது. "இந்தச் சம்பவம் குறித்து வெளியில் யாரிடமாவது சொன்னாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ உன்னைக் கொலை செய்து விடுவோம்" என்று கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். எனினும், அந்த கும்பலிடம் இருந்து ஒருவழியாகத் தப்பிப் பிழைத்து ஓடிவந்த அவர், இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், பெரம்பூர் நல்லாடை காவல் சரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியவர்கள் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த சரண் (26), செந்தமிழ்வாணன், ஐயப்பன், ஹரி, விஸ்வா, நந்தகுமார், சரவணகுமார் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் உட்பட 8 பேர் என்பது தெரியவந்தது.
இருவர் கைது - 6 பேருக்கு வலைவீச்சு
இதையடுத்து, பெரம்பூர் போலீசார் அந்த கும்பல் மீது ஜாதி ரீதியாகத் திட்டுதல், ஆயுதங்களுடன் மிரட்டுதல், கலவரம் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, நல்லாடை தோப்புத் தெருவைச் சேர்ந்த முக்கியப் குற்றவாளியான சரண் (26) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிறுவன் என்பதால், அவர் சட்ட விதிகளின்படி காவல் நிலைய பிணையில் (Station Bail) விடுவிக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள செந்தமிழ்வாணன், ஐயப்பன், ஹரி உள்ளிட்ட மீதமுள்ள 6 பேரை போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ- குடும்பத்தினர் கண்ணீர் குற்றச்சாட்டு
இச்சூழலில், இச்சம்பவம் தொடர்பாகப் புதிய திருப்பமாகப் பாதிக்கப்பட்ட நபரை அந்த 8 பேர் கொண்ட கும்பல் துரத்திச் செல்லும் சிசிடிவி மற்றும் மொபைல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. அதோடு, பாதிக்கப்பட்ட பாரதிராஜாவின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருப்பதாவது:
"எங்கள் மகனை அந்த கும்பல் ஜாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியதோடு நிறுத்தவில்லை. அவரை ஓட ஓட விரட்டிப் பிடித்து, ஆடைகளை முற்றிலும் களைந்து, பலவந்தமாக ஓரினச்சேர்க்கை (பாலியல் வன்கொடுமை) செய்ய முயற்சித்துள்ளனர். இந்த கொடூரச் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டிய பெரம்பூர் காவல்துறையினர், குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை." இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், காவல்துறையின் மீதான விமர்சனத்தையும் எழுப்பியது.
காவல்துறை தரப்பு விளக்கம்: "பாலியல் புகார் உண்மையில்லை"
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பெரம்பூர் காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது;
"பாதிக்கப்பட்ட நபர் நல்லாடை ஏடிஎம் அருகே அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் 'யார் நீ? ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறாய்?' என்று கேட்டுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது. இதில் அவர் தாக்கப்பட்டது உண்மை, அதற்காக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இணையத்தில் பரப்பப்படுவது போல அவருக்கு பாலியல் தொந்தரவோ அல்லது ஓரினச்சேர்க்கை முயற்சியோ நடக்கவில்லை. அக்குற்றச்சாட்டில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. தலைமறைவாக உள்ள மற்ற 6 பேரையும் விரைவில் கைது செய்வோம்." என காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஒருபுறம் குடும்பத்தினரின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும், மறுபுறம் காவல்துறையின் மறுப்பும் என இந்த விவகாரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























