தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மூதாட்டி: குண்டர் சட்டத்தில் சிறை! மயிலாடுதுறை அதிரடி நடவடிக்கை, காரணம் என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 60 வயது மூதாட்டி ராஜகுமாரி என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
ரகசிய தகவலும் போலீஸ் வேட்டையும்
மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பட்டினம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆர்பாக்கம் பகுதியில், பாண்டிச்சேரி மதுபானங்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த 01.02.2026 அன்று சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
சிக்கிய மூதாட்டி - பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்
காவல்துறையினர் ஆர்பாக்கம், பள்ளிக்கூடத்தெரு பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு வசிக்கும் குணசேகரன் என்பவரது மனைவி ராஜகுமாரி (60), என்பவர் தனது வீட்டின் அருகே ரகசியமாக மது விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மறைமுகமாக விற்பனை செய்யும் இடத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 110 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம், 180 மி.லி அளவு கொண்ட மதுபானங்கள் அடங்கிய 531 பாட்டில்களை (95 லிட்டர்), சட்டவிரோத மதுபானங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பிடிப்பட்டது. அதனை அடுத்து ராஜகுமாரியை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட ராஜகுமாரி என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு மதுவிலக்கு குற்ற வழக்குகள் இருப்பதும், அவர் தொடர்ந்து இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரைத் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடந்த 20.02.2026 அன்று ராஜகுமாரியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, 21.02.2026 நேற்று சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா மற்றும் காவல் ஆளிநர்கள் ராஜகுமாரியைத் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
காவல் கண்காணிப்பாளரின் கடும் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இது குறித்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும்
அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தீவிரமாகத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள், ரௌடிசம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த ஒருவர் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் என மொத்தம் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி நடவடிக்கை மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
























